கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயா அஞ்சன் மற்றும் நடிகர் சித்து தம்பதியர் தங்களுடைய காதல் கதை குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர்.
ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த ஸ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து தம்பதியர் தங்கள் காதல் மற்றும் நம்பிக்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர். அதில், ஸ்ரேயா அஞ்சன், தாங்கள் எப்படி காதலிக்கத் தொடங்கினோம், சித்துவைப் பிடிக்க காரணம் என்ன என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார். சின்னத்திரை நடிகை ஸ்ரேயா அஞ்சன், திருமணத்திற்கு முன்பு கொடைக்கானலுக்கு சூட்டிங் போயிருக்கும் போது எதிர்பாராத விதமாக தனக்கு பீரியட்ஸ் வந்துவிட்ட நேரத்தில் தான் பட்ட வலி வேதனை குறித்து பேசி இருக்கிறார். கொடைக்கானலில் பீரியட்ஸில் தான் கஷ்டப்பட்டபோது தனக்கு துணையாக இருந்த சித்து பல எதிர்பார்க்காத உதவிகளை செய்தார். அதற்கு பிறகு, தான் எனக்கு அவரை அதிகமாக பிடிக்க தொடங்கியது என்று ஸ்ரேயா பேசியிருக்கிறார்.
மேலும், திருமணத்திற்கு பிறகு தங்களுடைய வாழ்க்கை பற்றி ஸ்ரேயா - சித்து தம்பதி மனம் திறந்து பேசியுள்ளனர். திருமணத்திற்கு பிறகு சித்து ராஜா ராணி சீசன் 2 சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி என்ற சீரியலில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் பெரிய அளவில் எந்த பெரிய சீரியலிலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றில் ஸ்ரேயா - சித்து தம்பதியர் தங்களுடைய திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர். அதில் ஸ்ரேயா கூறியிருப்பதாவது: “நான் சீரியலில் சித்துவோடு நடிக்கும் போது எனக்கு ஆரம்பத்தில் இவரோடு சண்டைதான் வந்திருக்கிறது. எனக்கு தமிழ் தெரியாததால் தமிழ் சொல்லிக் கொடுத்தது சித்து தான். அதற்குப் பிறகு ஒருநாள் நடந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. அதாவது அந்த நேரத்தில் நாங்கள் ஒரு சூட்டிங்காக கொடைக்கானலுக்கு போய் இருந்தோம். அங்கு எதிர்பார்க்காத விதமாக எனக்கு பீரியட்ஸ் வந்துவிட்டது. அந்த நேரத்தில் நான் பேட் எதுவும் எடுத்துட்டு போக மறந்து விட்டேன். நாங்கள் சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு, தங்கி இருக்கும் இடத்திற்கு வந்தால் கூட ஒரு மணி நேரம் டிராவல் செய்ய வேண்டும். அதனால் நான் என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சித்து தான் சில உதவிகளை செய்தார். அதற்கு பிறகு தான் எனக்கு அவர் மீது பெரிய நம்பிக்கை வந்தது, அவரை பிடிக்கவும் தொடங்கியது” என்று கூறியுள்ளர்.
திருமணத்திற்குப் பிறகு, சமூக வலைதளங்களில் சிலர் நீங்கள் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்பது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரேயா “திருமணத்திற்கு பிறகு ஒரு சிலர் குழந்தை எப்போது என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் எங்களிடம் அதைக் கேட்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நாங்கள் இருவரும் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறோம், அதனால் நாங்கள் குழந்தை எப்போது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எடுக்கிற முடிவே போதும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், சமூக வலைத்தளத்தில் ஒரு பெண்மணி எனக்கு அடிக்கடி சூர்யா, ஜோதிகா குழந்தைகளோடு இருக்கும் புகைப்படம் மற்றும் ரன்பீர் கபூர் – அலியா பட் தங்களுடைய குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தை அனுப்பி, எப்படி இருந்தாலும் ஆசைகள் இருக்க தானே செய்யும் என்று என்னிடம் கேள்வி கேட்பார். அதைப் பார்த்து ஏன் இவங்க இப்படி பண்றாங்க என்று எங்களுக்கு தோணும். அது போல சமீபத்தில் நான் ஒரு விளம்பரத்தில் கர்ப்பமாக இருப்பது போன்று நடித்து இருந்தேன். இதை அடுத்து எல்லோரும் எங்களிடம் குழந்தை எங்கே என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லாவற்றுக்கும் நேரம் என்று ஒன்று வரும்” என்று ஸ்ரேயா அஞ்சன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“