80-களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா தனது நடிப்பால் மட்டும் இல்லாமல், தனது கவர்ச்சியாக குரலின் மூலமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். ஆனால் அவர் தனது சொந்த குரலில் பேசவில்லை, தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் ஒருவரின் சகோதரி தான் சில்க் ஸ்மிதாவுக்கு தமிழ் சினிமாவில் குரல் கொடுத்துள்ளார்.
மலையாள படங்களில் அறிமுகமான வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சில்க் ஸ்மிதா. தொடர்ந்து ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்த இவர், முன்னணி நடிகர்களின் படங்களில், கவர்ச்சி நடனம் மற்றும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் சில்க் ஸ்மிதா.
இதனிடையே கடந்த 1996-ம் ஆண்டு தனது 35-வது வயதில் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டார். 28 ஆண்டுகள் கடந்திருந்தாலும், தற்போதுவரை சில்க் ஸ்மிதா குறித்து நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என திரையுலகினர் பலரும் பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சில்க் ஸ்மிதாவுக்கு தமிழில் குரல் கொடுத்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
1987-ல் விசு இயக்கத்தில் வெளியான திருமதி ஒரு வெகுமதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான எம்.எஸ்.பாஸ்கர் அதன்பிறகு, பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். காமெடி குணச்சித்திரம் என எந்த கேரக்டராக அதில் தனது தனித்துவத்தை புகுத்தி வித்தியாசத்தை காட்டும் எம்.எஸ்.பாஸ்கர், 8 தோட்டாக்கள், அரிமா நம்பி உள்ளிட்ட பல படங்களில் தனது கேரக்டருக்கு வலு சேர்த்து அசத்தியிருப்பார்.
நடிகராக இருந்தாலும், ஆரம்பத்தில் எம்.எஸ். பாஸ்கர் ஒரு டப்பிங் கலைஞராக இருந்துள்ளார். அவரை போலவே அவரது சகோதரி ஹேமா மாலினியும் ஒரு டப்பிங் கலைஞர் தான். தமிழ் சினிமாவில், 1976-ம் ஆண்டு தொடங்கி, பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ள, 1976-ம் ஆண்டு சிவக்குமார் நடிப்பில் வெளியான சிட்டுக்குருவி என்ற படத்தில் தான் முதல்முறையாக டப்பிங் பேச தொடங்கியுள்ளார்.
அதன்பிறகு பல படங்களில் ஹீரோயின்களுக்கு இவர் டப்பிங் பேசியிருந்தாலும், 1979-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில், பாக்யராஜ் நாயகனாக அறிமுகமாக புதிய வார்ப்புகள் படம் தான் இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடித்த ரதி, இந்தி நடிகை என்பதால், எப்படி இவ்வளவு அற்புதமாக தமிழில் பேசியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்போது ஒரு பெரிய பத்திரிக்கையில், ஹேமா மாலினி தான் அவருக்கு டப்பிங் பேசியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
அதன்பிறகு, என் ராசாவின் மனசிலே படத்தில், மீனா, உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ள ஹேமா மாலினி, சில்க் ஸ்மிதா நடித்த பெரும்பாலான தமிழ் படத்திற்கு இவர் தான் குரல் கொடுத்துள்ளார். நடிப்பு மற்றும் கவர்ச்சி பெயர் பெற்ற சில்க் ஸ்மிதாவுக்கு குரல் கொடுத்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் தான் இந்த ஹேமா மாலினி என்பது குறிப்பிடத்தக்கது.