என்னுடைய படங்களுக்கு பிரச்சனைகள் வருவது வழக்கமாகிவிட்டது, என மாநாடு பட முன்னோட்ட விழாவில் சிம்பு மேடையிலே கண் கலங்கி பேசியுள்ளார்.
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம், தீபாவளிக்கு திரையிட திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ரீலிஸ் ஆகாமல், வருகின்ற நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கியுள்ள மாநாடு படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்தில் சிம்பு உடன் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 18) 'மாநாடு' படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிலம்பரசன், எஸ்.ஏ.சி, சுரேஷ் காமாட்சி, யுவன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சிம்பு மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். சிம்பு பேசியதாவது, என்னுடைய படங்களுக்கு பிரச்சினை வருவது சாதாரணமான ஒன்றாகவே ஆகிவிட்டது. சுற்றி நிறைய பிரச்சினை செய்கிறார்கள். ஆனால், அப்படியான சூழலை எல்லாம் கடந்து தாக்குப் பிடித்து நிற்கும் ஒரு தயாரிப்பாளரால் மட்டும்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும் என்பது தெரிந்துவிட்டது. அப்போதுதான் நான் சுரேஷ் காமாட்சியிடம் இந்தப் படத்தை நீங்கள் எடுங்கள் என்று சொன்னேன். அதேபோல எத்தனையோ பிரச்சினைகளைத் தாண்டி இந்தப் படத்தைக் கொண்டுவந்துவிட்டார்.
யுவன் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அனைவரும் சொன்னது போல எனக்கென்றால் பயங்கரமாக இசையமைத்துவிடுவார். நான் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் தாங்கிக் கொள்வார். அவரிடம் உங்கள் ராசி, நட்சத்திரம் அனைத்தையும் கொடுங்கள். அப்படிப்பட்ட பெண்ணைத்தான் நான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்வேன். இந்தப் படத்துக்காக நிறைய ரிஸ்க் எடுத்துச் செய்துள்ளேன்.
நிறைய பிரச்சினைகளை பார்த்துவிட்டேன். நிறைய பிரச்சினைகள் கொடுக்கிறார்கள். பிரச்சினைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு சிம்பு பேசினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil