அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பாடகி அனிதா குப்புசாமி, சமுதாயத்தில் நடக்கும் அவல நிலை குறித்து பேசி இருக்கிறார். அம்மாவை பிரிந்து வளரும் ஒரு குழந்தை தன்னுடைய பெற்றோரைப் பழி வாங்குவதற்காக செய்த செயல் குறித்து வருத்தத்தோடு பகிர்ந்து உள்ளார் அனிதா குப்புசாமி.
இன்றைய அவசர காத்தில் எல்லோருமே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் 2 பேர் வேலை பார்த்தாலே குடும்பத்தை ஓட்டுவதற்கு அல்லல்படும் சூழ்நிலைதான் இருந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு பணம் வந்தாலும் மாத கடைசியில் எங்கே போனது என்று தெரியாமல் விழி பிதுங்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இப்போதுள்ள இளம் தலைமுறைகளின் நடவடிக்கைகள் பல விஷயங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், சில விஷயங்கள் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
பெற்றோர் படும் கஷ்டங்களை பலர் புரிந்து கொள்வதில்லை. இதுகுறித்து பல பெற்றோர்கள் புலம்புவதை கேட்டிருப்போம். அதுபோலத் தான் பாடகி அனிதா குப்புசாமியும் தான் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒருசில சம்பவங்களை பகிர்ந்து உள்ளார். அனிதா குப்புசாமி பேசுகையில் இப்போதுள்ள இளம் தலைமுறையினர் செய்வதை பார்க்கும்போதே பயமாய் இருக்கிறது.
எனக்கு தெரிஞ்ச ஒரு பெண்மணியும் அவருடைய கணவரும் என்னிடம் பேசும்போது அவங்க பொண்ணு செய்வதை சொல்லி அழுதாங்க. அவர்களது பொண்ணு 10-ம் வகுப்பு படிச்சிட்டு இருக்குது. ஆனா அந்த பொண்ணு அவருடைய காதலனுக்கு மெசேஜ் டைப் பண்ணும் போதும் சரி, போன் பேசும்போதும் பெற்றோர் என் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று டார்ச்சர் செய்கிறாளாம். நீங்க என்கிட்ட இல்லையென்றால் நான் தற்கொலை செய்வேன், நான் என்ன பேசினாலும் நீங்க என்னிடம் கேள்வி கேட்கக்கூடாது. நான் அவன் கிட்ட பேச கூடாதுன்னு நீங்க சொல்லக் கூடாது என்றெல்லாம் மிரட்டுறாளாம். அவளுக்கு பெற்றோர் மீது அவ்வளவு கோபம், அதிலும் அவங்க அம்மா வேலைக்கு போனதால நம்மளை சரியா பாத்துக்கல என்ற கோபத்தால் அவங்களை பழிவாங்குவதற்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கிறது.
அந்த பொண்ணு டைரில இந்த அம்மாவை பார்த்து "சனியன் என்கிட்ட கேள்வி கேக்குது" அப்படி இப்படின்னு எழுதி இருக்கு. அந்த டைரியை பார்த்ததும் அந்த அம்மா அழுது இருக்காங்க. ஆனா கூட அந்த பொண்ணு நான் செத்துருவேன்னு சொல்லி மிரட்டிக்கிட்டே இருக்குது இதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு என்று அனிதா குப்புசாமி பேசியிருக்கிறார்.
இன்னொரு பெற்றோரும் என்கிட்ட பேசிகிட்டு இருந்தாங்க அவங்களோட பொண்ணும் ஏதாவது பேசினாலே அம்மாவை போட்டு அவ்வளவு அடிப்பாளாம். இல்லன்னா தெருவில் போய் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாளாம். பெற்றோரை பழிவாங்குவதற்காக இப்படி எல்லாம் செஞ்சுகிட்டு இருக்காங்க. இதெல்லாம் பெற்றோருக்கு எவ்வளவு பெரிய கொடுமை? பெற்ற குழந்தைகளுக்காகத் தான் அம்மா-அப்பா கஷ்டப்படுறாங்க என்பது அந்த குழந்தைகளுக்கு புரிய மாட்டேங்குது. அவங்களுக்கு நாம எவ்வளவோ சொல்லி கொடுத்தாலும் அவங்க ஏட்டிக்கு போட்டியாக பேசுறாங்க என்று மனம் நொந்து போய் அனிதா குப்புசாமி பேசியிருக்கிறார்.