சாமானிய பெண்கள் தொடங்கி சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் பெண்கள் வரை அனைவரும் நிச்சயம் பாலியல் தொல்லைகளை கடந்து வந்தவர்களாக இருப்பார்கள். இது போன்ற சம்பவங்களை சமீப நாட்களில் தைரியமாக பெண்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொள்கின்றனர். இதனால், இது போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து புகாரளிக்கும் துணிச்சலுடன் செயல்படுகின்றனர்.
அந்த வகையில், பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தி, தான் சந்தித்த பாலியல் சீண்டல் சம்பவங்கள் குறித்து தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆபாசமான புகைப்படங்களை பகிர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் பிறந்த ஜொனிடா காந்தி, கனடா நாட்டில் வசித்து வந்தார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'ஓ காதல் கண்மணி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவர் அறிமுகம் ஆனார். அப்படத்தில் இவர் பாடிய "மனம் மனம் மென்டல் மனமே" நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜொனிடா காந்தி பாடியுள்ளார்.
குறிப்பாக, 'வேலைக்காரன்', 'டாக்டர்', 'பீஸ்ட்', 'டான்' போன்ற படங்களில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் வைரல் ஹிட்டானது. இந்நிலையில், விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாகி வரும் "walking talking strawberry ice cream" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக ஜொனிடா காந்தி அறிமுகம் ஆகிறார்.
இந்த சூழலில், தாம் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்து ஜொனிடா காந்தி தெரிவித்துள்ளார். அதில், இன்ஸ்டாகிராமில் தனது நண்பர்களின் பதிவை பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு ஆணின் ஆபாசமான பதிவை பார்க்க நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது போன்ற நபர்களை உடனடியாக ப்ளாக் செய்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்த போதிலும், இவற்றை தான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று ஜொனிடா காந்தி தெரிவித்துள்ளார்.