தமிழ், தெலுங்கு திரையுலகில் பின்னணி பாடகியாக வலம் வரும் கல்பனா தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடகி கல்பனா தற்போது தெலங்கானா மாநிலம், ஹைதரபாத்தில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக இவரது வீட்டின் கதவு திறக்கப்படாதது குறித்து சந்தேகமடைந்த காவலாளி, சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவரது வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்ததில், கல்பனா சுய நினைவின்றி இருந்தது தெரியவந்தது. அவரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் நடந்த போது கல்பனாவின் கணவர், சென்னையில் இருந்ததாக தெரிகிறது. இத்தகவலறிந்ததும் அவர் ஹைதராபாத்திற்கு விரைந்தார். கல்பனாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல பின்னணி பாடகர் டி.எஸ் ராகவேந்திராவின் மகளான கல்பனா, கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்டார் சிங்கர் மலையாளம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார். இசையுலகின் ஜாம்பவான்களான இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து கல்பனா பணியாற்றியுள்ளார்.
தனது 5 வயதில் இசை உலகில் பயணத்தை தொடங்கிய கல்பனா, சுமார் 1,500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். மேலும், கடந்த 1986-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்திலும் கல்பனா நடித்துள்ளார். பிக்பாஸ் தெலுங்கு சீசன் 1 நிகழ்ச்சியிலும் கல்பனா கலந்து கொண்டார்.
முன்னதாக, கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் இடம்பெற்ற 'போடா போடா புண்ணாக்கு' என்ற பாடல் மூலமாக திரைத்துறையில் தனது இசை பயணத்தை கல்பனா தொடங்கினார். சமீபத்தில், மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கொடி பறக்குற காலம்', 36 வயதினிலேயே திரைப்படத்தில் இடம்பெற்ற 'போகிறேன்' ஆகிய பாடல்களை கல்பனா பாடியுள்ளார்.