/indian-express-tamil/media/media_files/2025/07/19/minmini-and-janaki-2025-07-19-16-13-15.jpg)
மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல பாடகியாக வலம் வருபவர் மின்மினி. இவரது பல பாடல்கள் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமானவை. இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என இசை ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருக்கிறது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், 1989-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்வகதம்' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். ராஜாமணி இசையில் வெளியான இப்படத்தில் மூன்று பாடல்களை மின்மினி பாடி இருந்தார். இதன் பின்னர், 1992-ஆம் ஆண்டு வெளியான 'மீரா' திரைப்படம் மூலம் இளையராஜா இவரை தமிழுக்கு அழைத்து வந்தார். இதேபோல், இசையமைப்பாளர் மரகதமணி, இவரை தெலுங்கில் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த நேர்காணலில் தனது திரைப்பயணம் குறித்து பல்வேறு விஷயங்களை பாடகி மின்மினி பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தன்னுடைய ஒரு பாடல் குறித்து பாடகி ஜானகிக்கு எழுந்த சந்தேகத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அப்போது, "இளையராஜா இசையில் பாடிக் கொண்டிருந்த போதே, ஏ.ஆர். ரஹ்மான் இசையிலும் பல பாடல்கள் பாடி இருக்கிறேன். 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'வண்டிச்சோலை சின்ராசு' போன்ற பாடங்களில் என் பாடல் இடம்பெற்றுள்ளது. 'திருடா திருடா' படத்தில் இடம்பெற்ற 'ராசாத்தி என் உசுரு' பாடல் பெரிய ஹிட்டானது.
இதேபோல், 'காதலன்' படத்தில் இடம்பெற்ற 'இந்திரையோ இவள் சுந்தரியோ' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 'ஜென்டில்மேன்' படத்தில் 'பாக்காதே' என்ற பாடல் தனித்துவமானது. அன்றைய காலகட்டத்தில் அந்தப் பாடல் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் பாடலை நினைவு கூரும் போது, பாடகி ஜானகி அம்மா எனக்கு போன் செய்தது நியாபகம் வரும்.
அதன்படி, சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பாடகி ஜானகி அம்மா திடீரென எனக்கு போன் செய்தார். அப்போது, 'பாக்காதே' பாடலை பாடியது நீயா? இல்லை நானா? என்று அவர் கேட்டார். இப்படி சில மலரும் நினைவுகள் இருக்கின்றன" என்று பாடகி மின்மினி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.