கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்திய சினிமா உலகில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர். இசை ரசிகர்களால் எஸ்.பி.பி என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆகஸ்ட் 5ம் தேதி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலேயே அவரது உடல்நிலை மோசமானது. அவர் வெண்டிலேட்டரில் உயிர் காக்கும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
எச்.பி.பி-யின் உடல்நிலை மோசமானதால் திரையுலகினரும் ரசிகர்களும் மிகுந்த கவலை அடைந்தனர். அதனால், எஸ்.பி.பி விரைவாக குணமடைந்து வர வேண்டும் என இயக்குனர் பாரதிராஜ அழைப்பின் பேரில் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.
பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்து வருகிறார். எஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவரும் எம்.ஜி.எம் மருத்துவமனையும் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. உயிர் காக்கும் எக்மோ கருவி மூலம் எஸ்.பி.பி-யின் உடல்நிலை கண்காணிக்கப்படு வருகிறது. அவருக்கு பிஸியோதெரப்பி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"