கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். கடந்த ஜனவரி 10 அன்று தான் யேசுதாஸ் தனது 85-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். இவர் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, அரபு, ரஷ்யன், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
யேசுதாஸ் 8 தேசிய விருதுகள் மட்டுமின்றி ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். கேரளா, தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாநில அரசு விருதுகள் உட்பட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி மத்திய அரசால் 1975 இல் பத்மஸ்ரீ, 2002 இல் பத்ம பூஷன் மற்றும் 2017 இல் பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
85 வயது என்றாலும், அவர் மேடையில் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தோன்றி பாடல்களை பாடி வருகிறார். நவம்பர் 2024 இல், அவர் கிறிஸ்தவ பிரார்த்தனையான சர்வேசாவை சமஸ்கிருத்தில் பாடி அசத்தினார்.
யேசுதாஸ் உடல்நலக் குறைவு?
இந்நிலையில், பாடகர் யேசுதாஸ் வயதுமூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சினைக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும், பரிசோதனைக்குப் பின் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
விஜய் யேசுதாஸ் விளக்கம்
இந்த நிலையில், பாடகர் யேசுதாசின் உடல்நலக் குறைவு தொடர்பாக பரவி வரும் தகவல்கள் குறித்து அவரது மகன் விஜய் யேசுதாஸ் விளக்கம் அளித்துள்ளார். அவரிடம் இந்தியா டுடே டிஜிட்டல் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய நிலையில், அப்போது விஜய் யேசுதாஸ், இந்த செய்திகள் பற்றி தான் அறியவில்லை என்றும், " அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை" என்றும் கூறி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், யேசுதாஸ் நலமுடன் இருப்பதாகவும், தற்போது அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.