வடசென்னை படத்தில் சிலரது மனதை புண்படுத்தும் வகையில் உள்ள காட்சிகள் நீக்கம் செய்யப் படும் என்று இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த அக்டோபர் 17ஆம் தேதி வெளியான படம் ’வடசென்னை’. தமிழகம் முழுவதும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல இந்த படத்தின் கதை களம் சிலரை புண்படுத்திவிட்டதாக விமர்சனமும் வைக்கப்படுகிறது.
வடசென்னை காட்சிகள்:
இந்நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் மன்னிப்புக்கேட்டு ஒரு வீடியோவை பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் வெற்றிமாறன் கூறியிருப்பதாவது,
”வடசென்னை படத்தில் மீனவ சமுதாய மக்களை புண்படுத்தும்படியான காட்சிகள் இருப்பதாக பலர் சமூகவலைதளத்தில் பதிவிடுகின்றனர். எங்களின் நோக்கம் எந்த ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு எதிராக அரசியலோ, சினிமாவோ செய்வது அல்ல. இப்படத்தில் குறிப்பாக படகில் வரும் முதலிரவு காட்சி மீனவ சமுதாயத்தின் மனதை புண்படுத்துவதாகவும், மிகவும் இளிவாக சித்தரிப்பதாக தெரிவித்திருந்தனர்.
இக்காட்சியை இத்திரைப்படத்திலிருந்து நீக்குவதாக தீர்மானம் செய்துள்ளோம். அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். இதை தனிக்கை குழுவுக்கு தெரிவித்துவிட்டு அதை நீக்க 10 வேலை நாட்களாகும். மீண்டும் ஒருமுறை நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் எங்களின் நோக்கம் யாரையும் இழிவுப்படுத்துவதோ அல்லது குறைத்து காட்டி அதன் மூலமாக சினிமாவில் லாபம் பார்ப்பது எங்களது நோக்கம் அல்ல.
அதேபோல வடசென்னை 2 மற்றும் 3ஆம் பாகத்தில் அந்த பகுதி மக்களுடைய வாழ்வாதார பிரச்சனைகளையும், அவர்கள் சந்தித்து கொண்டிருக்கும் நெறுக்கடிகளையும் விவாதிக்கபப்டும், அங்கிருக்கும் இளைஞர்கள் எல்லாத்துறைகளிலும் இருக்கும் நெறுக்கடிகளில் இருந்து எவ்வாறு மீண்டு வருகிறார்கள் என்பதைதான் பதிவிட உள்ளோம்.
மீண்டும் ஒருமுறை இந்த படத்தினுடைய பாத்திரப்படைப்புகள், படத்தினுடைய சம்பவங்கள் ஒரு தனி நபரையோ அல்லது ஒரு சமூகத்தையோ புண்படுத்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கின்றோம், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.