சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 2.0 திரைப்படத்தின் டீசர், சமூக தளங்களில் சட்டவிரோதமாக பதிவேற்றப்பட்டது சகித்துக் கொள்ள முடியாதது என சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' படத்தின் டீசர், திருட்டுத் தனமாக இணையதளங்களில் இன்று வெளியானது. இதுகுறித்து ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், "2.0 திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வ ரிலீஸுக்கு முன்பாகவே திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றப்பட்டது சகித்துக் கொள்ள முடியாதது. ஒரு சில நொடி உற்சாகத்துக்காக, திரைப்படத்தை உருவாக்குபவர்களின் கடின உழைப்பையும், உணர்வுகளையும் சீரழிக்கும் இதயமற்றச் செயலாகும். டிஜிட்டல் மீடியாவை தவறாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.