பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீண்டு வர, திரையுலகினரும், ரசிகர்களும் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisment
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடக்கத்தில், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டபோது, ரசிகர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் என பலரும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
This was at March before the lockdown with my dear mamaaa #SPBalasubrahmanyam gaaru ❤️
இதனிடையே, பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து, அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ மூலம் அறிவித்து வந்தார். மருத்துவமனை நிர்வாகமும் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு எஸ்.பி.பி.க்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நெகட்டிவ் என்று முடிவு வந்ததால் அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டது தெரியவந்தது. ஆனாலும், அவருக்கு தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் செப்டம்பர் 22ம் தேதி எஸ்.பி.பி-யின் உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் அவர் விரைவில் வீட்டுக்கு செல்ல ஆவலாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எம்.ஜி.எம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகஸ்ட் 5ம் தேதி எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து எக்மோ மற்றும் உயிர் பாதுகாப்பு கருவிகளுடன் வைக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்துள்ளது. மேலும், அவருக்கு அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் குழு அவருடைய உடல்நிலையை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.
எஸ்.பி.பி ஆபத்தான நிலையில் உள்ளதாக செய்தி வெளியானதால் ரசிகர்களும் சினிமா துறையினரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். எஸ்.பி.பி உடல்நிலை குறித்து கேள்விப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், எஸ்.பி.பி உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கே அவர், மருத்துவர்களிடம் எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"