/indian-express-tamil/media/media_files/2025/09/11/tamil-cinema-nhs-2025-09-11-17-24-07.jpg)
பாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் போனி கபூர், தான் பெரிய பொருட்செலவில் தயாரித்த 'மைதான்' திரைப்படம் படுதோல்வியை சந்தித்ததால், தற்போது கடனாளியாக இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், இது அவருக்கு ஏற்பட்ட முதல் நிதி நெருக்கடி அல்ல என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
கடந்த 1993 ஆம் ஆண்டில் போனி கபூர் தயாரித்த தயாரித்த பிரம்மாண்ட பட்ஜெட் படமான 'ரூப் கி ராணி சோரோன் கா ராஜா' (Roop Ki Rani Choron Ka Raja) தோல்வியடைந்த போதும் இதேபோன்ற நிதி நெருக்கடியைச் சந்தித்தார். அந்த கடன்களை அடைக்க அவருக்கு நான்கு ஆண்டுகள் ஆனது. தனது சகோதரர் அனில்கபூர், மனைவி ஸ்ரீதேவி, ஆகியோர் நடிப்பில் போனி கபூர் தாயரித்த இந்த படம், அந்த காலக்கட்டத்தில் பல கோடிகளை செலவு செய்ததாக கூறப்படுகிறது.
கோமல் நஹ்தாவுடனான ஒரு நேர்காணலில், போனி கபூர் 'ரூப் கி ராணி சோரோன் கா ராஜா' திரைப்படத்திற்காக அதிக அளவில் விளம்பரப் பிரச்சாரம் செய்ததாகவும், ஆனால் இயக்குநர் சேகர் கபூர் பாதியிலேயே விலகியதால் அந்த செலவுகள் எந்தவிதப் பலனையும் தரவில்லை என்றும் கூறினார். அதே நேரத்தில், பஹ்லாஜ் நிஹலானி மிகக் குறைந்த விளம்பரங்களுடன் 'ஆங்கேன்' (Aankhen) என்ற படத்தை வெளியிட்டார், அது மாபெரும் வெற்றி பெற்றது.
இதற்கு அவர் சமீபத்தில் வெளியான 'சைய்யாரா' (Saiyaara) என்ற மாபெரும் வெற்றிப் படத்தையும் ஒப்பிட்டார். எந்தவித விளம்பரமும் இன்றி, அதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரின் பலத்தால் மட்டுமே அந்தப் படம் உலகளவில் ரூ500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதனிடையே, போனி கபூர் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒருபோதும் பணியாற்ற மாட்டேன் என்றும், இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் விளம்பரத்திற்காக ஸ்டுடியோக்கள் ரூ30 கோடி செலவு செய்வதை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இப்போது விளம்பரம் என்பது வெறும் விளம்பரம் மட்டும் இல்லை. நடிகர்கள் தங்களது குழுவினருடனும் வருகிறார்கள். நடிகருக்கு மட்டுமின்றி, அவருடன் வரும் ஐந்து, ஆறு பேருக்கும் டிக்கெட்டுகளை வாங்குகிறீர்கள். பெரும்பாலான கார்ப்பரேட் அதிகாரிகள் திரைப்படத் தயாரிப்பின் நிஜநிலை தெரியாதவர்கள். சில நேரங்களில் விளம்பரங்களில் எல்லை மீறிச் செல்கிறார்கள்; கதைக்கு என்ன தேவை என்று பார்க்காமல், பெரிய நட்சத்திரங்கள் என்று நினைத்து நடிகர்களைத் தேர்வு செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
'ஆங்கேன்' படம் குறித்து மீண்டும் பேசிய போனி கபூர், "அப்போது பஹ்லாஜ் நிஹலானி, ஒரு விளம்பர பலகை கூட வைக்காமல், போஸ்டர்களை மட்டுமே பயன்படுத்தி படத்தை வெளியிட்டார். அந்த படம் ஒரு பிளாக்பஸ்டர் ஆனது. அதற்கு முன் வெளியான 'ரூப் கி ராணி' படத்திற்கு நாங்கள் பெரிய அளவில் விளம்பரப் பிரசாரம் செய்தோம். ஆனால், படம் வெற்றிபெறவில்லை. அதேபோலத்தான் இப்போது 'சைய்யாரா' படத்திற்கும் நடந்துள்ளது. இந்த படத்திற்காக நடிகர்கள் பேட்டி கொடுக்கவில்லை, நகரங்களுக்குச் சென்று சுற்றுப்பயணம் செய்யவில்லை, ஷாப்பிங் மால்களில் நடனமாடவில்லை" என்று குறிப்பிட்டார்.
கலாட்டா இந்தியாவுடனான முந்தைய நேர்காணலில், 'ரூப் கி ராணி சோரோன் கா ராஜா' திரைப்படம் தனக்கு ரூ12 கோடி கடன் ஏற்படுத்தியதாகவும், ஆனால் தனது மனைவியும் குடும்பமும் இந்த கடனை அடைக்க உறுதுணையாக நின்றதாகவும் போனி கபூர் தெரிவித்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்கத் துரத்தியபோதும், தலைமறைவாகாமல் அனைவருக்கும் பதில் அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தை பற்றி கூறிய போனி கபூர், "என் மனைவி உடன் இருந்தார். அவள் சித்திவிநாயகர் கோயிலுக்கு வெறும் கால்களால் நடந்து சென்றாள். என் சகோதரர்கள் எனக்கு ஆதரவாக நின்றனர்" என்று அவர் கூறினார்.
அவரது மகன் அர்ஜுன் கபூர், தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த நேர்காணலில், "அவர் நிறைய சவால்களை எதிர்கொண்டவர், அதில் இருந்து மீண்டு எழுந்தவர். அவர் ஒரு தொழில்முனைவோன் மற்றும் ஆபத்துகளை எடுத்துக்கொள்ளும் மனிதர். சிலர் பணக்காரர்கள், சிலரிடம் பணம் இல்லை என்றாலும் அவர்கள் வசதி படைத்தவர்கள்; என் தந்தை ஒரு மனதளவில் வசதி படைத்தவர்" என்று தனது தந்தையைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.