STR's Maanaadu: சிறிது இடைவெளிக்குப் பின் நடிகர் சிம்பு மீண்டும் பிஸியாகிவிட்டார்.
இவரின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பின்னர் இயக்குநர் சுந்தர் சி-யின் இயக்கத்தில், ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் நடித்தார். ஆனால் இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
’காற்றின் மொழி, 90 எம்.எல்’ ஆகியப் படங்களில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார்.
தற்போது ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்திலும், இயக்குநர் வெங்கட் பிரபுவின், ‘மாநாடு’ படத்திலும் நடிக்கக் கமிட்டாகியிருக்கிறார்.
இதில் மாநாடு படத்திற்காக உடல் எடையைக் குறைக்க லண்டன் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார் சிம்பு. அதனால் அவர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கக் கூட வரவில்லை.
இந்நிலையில், நேற்று சிம்புவின் தம்பி குரளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரை பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். அப்போது சிம்புவுடன் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.
அந்தப் படத்தை ட்விட்டரில் பகிர்ந்த வெங்கட் பிரபு, “திரும்பி வந்துட்டார், மாநாடு படபிடிப்பு மே மாதத்தில் துவங்குகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதனால் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்!