விஜய் டிவியில் தினமும் மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் காற்றுக்கென வேலி. ஐஏஎஸ் படிக்க ஆசைப்படும் வெண்ணிலாவுக்கு அவரது அப்பா கல்யாண ஏற்பாடு செய்கிறார். இதுப்பிடிக்காத வெண்ணிலா, தனது அம்மாவின் ஆதரவுடன் கல்யாண நாளன்று வீட்டைவிட்டு வெளியேறுகிறார். என்ன செய்வது எங்கே போவது என தெரியாமல் தவிக்கும் வெண்ணிலாவுக்கு, நாயகனின் அம்மாவாக வரும் சாரதா உதவுகிறார்.
வெண்ணிலா கல்லூரியில் சேர்வதற்கு பல தடைகள் இருந்தாலும் அதையெல்லாம் முறியடித்து, வெற்றிகரமாக கல்லூரியில் சேருகிறார். அந்த கல்லூரியில் வேலை பார்க்கும் ஆசிரியராக சூர்யா வருகிறார். கல்லூரியில் வெண்ணிலாவுக்கு பல பிரச்சனைகள் வருகிறது. இருந்தும் சூர்யா வெண்ணிலாவுக்கு உறுதுணையாக நிற்கிறார். ஆசிரியருக்கும், இவளுக்கும் நட்பு உண்டாகிறது. அந்த நட்பு பின் காதலாவது போல் சீரியல் நகர்கிறது.
இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சூர்யா தர்ஷன் நடித்து வந்தார். இவர்களின் ஜோடி ரசிகர்களுக்கு குறிப்பாக கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் சூர்யா தர்ஷன் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தற்போது சுவாமிநாதன், சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இந்த சீரியலுக்கு தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படிக்கும் வயதில் ஆசிரியர் மீது காதல் கொள்வது போன்ற தவறான படிப்பினைகளை இந்த சீரியல் விதைக்கிறது. இதைப் பார்க்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்.
ஏற்கெனவே தமிழகத்தில் நிறைய பாலியல் கொடுமைகள் நடந்துள்ளன. அதனால் பல பள்ளி, கல்லூரி மாணவிகள் உயிரை மாய்த்துள்ளனர். குறிப்பாக ஆசிரியர்களே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுவது பெற்றோரை பதைபதைக்க வைத்துள்ளது.
பெண்குழந்தைகளை வீட்டுக்குள்ளே பூட்டிவளர்க்கும் பெற்றோர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் தான் தங்கள் பிள்ளைகளை பயமில்லாமல் அனுப்பி வந்தனர். தற்போது அதுவும் கேள்விக்குறியாகியுள்ளது.
தெய்வமாகவே இருந்தாலும் அது ஆசிரியருக்கு பிறகுதான் என்று சொல்லி இந்த சமூகம் நம்மை வளர்க்கிறது. ஏற்கெனவே கள்ளக்காதல், சந்தேக கணவன், மாமியார் கொடுமை, மூடநம்பிக்கை போன்ற பிற்போக்குத்தனங்களைத் தான் சீரியலாக எடுத்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில், பெரும்பாலான மக்களால் பார்க்கப்படும் சீரியலில் நல்ல விஷயங்களை கூறாமல், இந்த மாதிரி ஆசிரியருக்கும், மாணவியும் காதல் வயப்படுவது போல் காண்பிப்பது கொஞ்சம் கூட ஏற்க்கூடியததாக இல்லை. இதைப்பார்க்கும் இளம்பெண்களின் மனதிலும் இதுபோன்ற ஆசையை இந்த சீரியல் வளர்க்கும் என பெரும்பாலான மக்களும், ரசிகர்களும் இந்த சீரியலுக்கு தற்போது எதிர்ப்புக்கொடி காட்டியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“