சன் டிவியின் பேமஸ் சீரியலான மெட்டி ஒலியின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள நிலையில், சீரியல் குழு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. அம்மி அம்மி அம்மி மிதித்து என பாடல் ஒலிக்க தொடங்கினாலே அனைத்து இல்லத்தரசிகளும் டிவி முன் ஆஜராகிவிடுவார்கள். சன் டிவி சீரியல்களிலே 'சித்தி' சீரியலுக்கு அடுத்து பெரிய வெற்றி பெற்ற சீரியல் மெட்டி ஒலி தான்.
இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் சினி டைம் நிறுவனத்தின் சார்பில் சித்திக் தயாரித்த இந்தத் சீரியல் சன் டிவியில் 800 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பானது. டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.
மெட்டி ஒலி சீரியலின் கதையைப் பொறுத்தவரை ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பா டெல்லிகுமார் அந்தப் பிள்ளைகளை எப்படி வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்து வைக்கிறார், திருமணத்துக்குப் பிறகு அந்தப் பிள்ளைகள் தங்களது கணவர் வீடுகளில் சந்திக்கும் பிரச்னைகள் என நீளும்.
இந்த சீரியலில் நடித்ததன் மூலம் டெல்லி குமார், வியட்நாம் வீடு சுந்தரம், சேத்தன், போஸ் வெங்கட், சாந்தி வில்லியம்ஸ், காவேரி என சீரியலில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் நல்ல பெயர் கிடைத்தது. 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த சீரியல், அதன் பின்னர் இரண்டு முறை மறுஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அந்த அளவிற்கு இந்த சீரியலுக்கு வரவேற்பு இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே 'மெட்டி ஒலி' தொடரின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகள் சிலரிடம் இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்ததாகவும், அதே போல் புதிய நடிகர் நடிகைகளுக்கான ஆதிஷனும் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இரண்டாவது பாகத்தையும் திருமுருகன்தான் இயக்குகிறாரா அல்லது வேறு இயக்குநர் இயக்கப் போகிறாரா என்ற குழப்பம் நீடித்தது. மெட்டி ஒலி முதல் பாகத்தை திருமுருகன் இயக்க, தயாரித்தது சினி டைம் நிறுவனத்தின் சார்பில் சித்திக்.
சன் டிவியில் சீரியல்களை இயக்கி வந்த திருமுருகன் பின்னர் தனியாக 'திரு பிக்சர்ஸ்'; என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். எனவே 'மெட்டி ஒலி' 2 ஆம் பாகம் வரும் நிலையில், அந்த சீரியலை திருமுருகன் இயக்க மட்டும் செய்வாரா, தயாரிக்கவும் செய்வாரா என்கிற கேள்வி எழுந்தது.
மறுபுறம் இயக்குநர் திருமுருகன் 'திரு பிக்சர்ஸ்' சார்பில் புதிய சீரியல் ஒன்றிற்கு ஆடிஷன் நடத்தினார். கடந்த ஜனவரி முதல் 'இந்த வருடம் சந்திக்கலாம்' என அவரது நிறுவனம் சார்பில் சமூக வலைதளங்களில் பதிவு வெளியானது.
இந்தப் பின்னணியில் தற்போது, 'மெட்டி ஒலி 2' சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகப் போகிறது. அதேநேரம் தொடரை முதல் பாகத்தைத் தயாரித்த அதே 'சினி டைம்ஸ்' நிறுவனம்தான் தயாரிக்கிறது. ஆனால் தொடரை இயக்கப் போவது திருமுருகன் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்குப் பதிலாக இயக்குநர் விக்கிரமாதித்யன் 'மெட்டி ஒலி' இரண்டாவது பாகத்தை இயக்குகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரமாதித்யன், திருமுருகன் 'மெட்டி ஒலி'யை இயக்கிய போது செகண்ட் யூனிட் இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“