பிரபல தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் சீசன் 5 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேஷூக்கு இசையமைப்பாளர் இமான் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களாக நடந்து வந்த சூப்பர் சிங்கர் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபைனல்ஸை எட்டியது.இதில் ரசிகர்களிடம் தனது நாட்டுப்புற பாடல்களால் பெரும் ஆதரவை பெற்றிருந்த செந்தில் கணேஷ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சினிமா பாடல்களை நம்பி களத்தில் குதித்த போட்டியாளர்கள் மத்தியில், நாட்டுப்புறப்பாடல்கள் பாடி தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்த செந்தில் கணேஷ் பலருக்கும் பிடித்தமான போட்டியாளராக இருந்துள்ளார். இறுதி போட்டியில் அவர் பாடிய `தாண்டவகோனே’ பாடல் அரங்கத்தில் இருந்த ஓட்டுமொத்த பார்வையாளர்களையும் அழ வைத்தது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி இருவருக்கும் சமூகவலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
குறிப்பாக இவர்கள் பாடிய பாடல்கள் மக்கள் இசையை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றன. நெசவாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் வாழ்க்கையை எடுத்து பாடலாக பாடியது அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடுவதற்கு வாய்ப்பளிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி வெற்றியாளரான செந்தில் கணேஷுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவது மேடையில் உறுதியானது.
ஆனால், அதற்குள் திரைப்பட பாடகராக செந்தில் கணேஷ் இமான் இசையில் அறிமுகமாக இருக்கிறார்.இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா படத்தில் செந்தில் கணேஷ் பாடகராக அறிமுகமாகிறார். இந்த தகவலை இப்படத்தின் இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Glad to introduce folk music talent #SenthilGanesh from the Super Singer Fraternity for an energetic racy folk number in dir @ponramVVS ‘s #Seemaraja starring thambi @Siva_Kartikeyan and @Samanthaprabhu2 in the lead! Produced by @24AMSTUDIOS Lyric @YugabhaarathiYb Praise God! pic.twitter.com/aypAUrmv68
— D.IMMAN (@immancomposer) 16 July 2018
அந்த பதிவில், “நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷை திரைப்படத்தில் பாடகராக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். சீமராஜா படத்தில் நாட்டுப்புற பாடலை அவர் பாடியுள்ளார். இந்தப் பாடலை யுகபாரதி எழுதியிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.