கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் திரையரங்குகள் மூடியிருப்பதால் நடிகர் சூரியா, சூரரைப் போற்று திரைப்படத்தை ஓ.டி.டி.-யில் வெளியிட எடுத்துள்ள முடிவுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவரது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இந்தியாவில் மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் திரையரங்குகள், மால்கள் ஆகியவை கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதனால், தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியிட முடியாமல் வெளியிட்டுக்காக காத்திருக்கின்றன.
இயக்குனர் சுதா கொங்குரா இயக்கத்தில் நடிகர் சூரியாவே தயாரித்து நடித்த சூரரைப் போற்று திரைப்படம் படப்பிடிப்பு பணிகள் எல்லாம் நிறைவடைந்த நிலையில், கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில், விஜய், தனுஷ் போன்ற நடிகர்களின் படமும் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாமல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே, நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், வரலட்சுமி சரத்குமார் நடித்த டேனி, வைபவ் நடித்த லாக்கப் ஆகிய படங்கள் ஓ.டி.டி-யில் வெளியிடப்பட்ட்டன. இந்த நிலையில், நடிகர் சூரியா தான் நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தை சூழ்நிலை கருதி ஓ.டி.டி-யில் வெளியிடுவதாக அறிவித்தார். இதையடுத்து, சூரரைப் போற்று திரைப்படம் படம் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்க காலத்தில் இதுவரை ஓ.டி.டி-யில் வெளியான எல்லா திரைப்படங்களும் சிறிய பட்ஜெட் படங்கள்தான். முன்னணி நடிகர்கள் மற்றும் பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் வெளியானதில்லை. ஆனால், இப்போது முதன்முறையாக முன்னணி நடிகர் சூரியாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளியாக உள்ளதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூரியாவின் சூரரைப் போற்று ஓ.டி.டி-யில் வெளியாவது குறித்து விநியோகஸ்தரும் திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகியுமான திருப்பூர் சுப்ரமணியம் ஊடகங்களிடம் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலால் திரையரங்க உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். சினிமா துறையும் நெருக்கடியில் உள்ளது. இதை கவனத்தில் கொள்ளாமல் சூரியா எடுத்துள்ள முடிவு திரையரங்குகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்கும். சூரியா எடுத்துள்ள முடிவு தவறான முடிவு. அதே போல, எங்களுக்கும் திரையரங்குகளில் எந்த படத்தை திரையிடுவது என்று முடிவு எடுக்கும் உரிமை உள்ளது” என்று கூறினார்.
அதே போல, சூரியா சூரரைப் போற்று திரைப்படத்தை ஓ.டி.டி-யில் வெளியிட முடிவெடுத்துள்ளது குறித்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறுகையில், “நடிகர் சூரியா எடுத்துள்ள தவறான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலம். விரைவில் சகஜ நிலை திரும்பி திரையரங்குகள் திறக்கப்படும். இந்த நிலையில் சூரியா திரையுலகுக்கு தவறான வழியை காட்ட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"