தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. தன்னுடைய தந்தை டி.ராஜேந்திரன் போலவே இவரும் இயக்கம், இசை, பாடகர் எனப் பன்முக தன்மை கொண்டவர். ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ரசிகைகள் பட்டாளம் உள்ளது. இவருடைய நடிப்பில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் நல்ல வரவேற்பை பெற்றது. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ஹிட் அடித்தது.
கடந்த நாட்களில் சிம்பு நடித்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. உடல் எடையையும் அதிகரித்தார். இதனால் பொது வெளியில் விமர்சனங்களை எதிர்கொண்டார். பின்னர் வெங்கட் பிரபுவின் மாநாடு படம் மூலம் சூப்பர் கம்பேக் கொடுத்தார். அவரது ரசிகர், ரசிகைகள் உற்சாகமடைந்தனர். படம் நல்ல விமர்சனம் பெற்று வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
சிம்புவின் திருமணம் குறித்து அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். 39 வயதை எட்டி இருக்கும் சிம்புவின் திருமணம் குறித்த வதந்திகளும் பொது வெளியில் உலா வரும். இந்நிலையில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரன் சிம்புவின் திருமணம் குறித்து தகவல் கூறினார். காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயில் ராஜேந்திரன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என் மகனுக்கு பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட, என் மனைவி தேர்ந்தெடுப்பதை விட, அந்த குல மகளை, கலை மகளை, திரு மகளை இறைவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் என்னை பார்த்தாலும் எப்போது என் மகனுக்கு திருமணம் என்று கேட்கிறார்கள்? கடவுளின் அருளால் சீக்கிரமே என் மகன் திருமணம் நடக்கும்" என்று கூறினார்.
இதனால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாமடைந்தனர். விரைவில் சிம்புவின் திருமணம் நடக்க தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/