/indian-express-tamil/media/media_files/qR6IPgdlc2cmhmT58h2V.jpg)
கே.பி.ஒய்.பாலா
தனது சமூகசேவையில் 5-வது ஆம்புலன்ஸ் வழங்கிய விஜய் டிவி புகழ் கே.பி.ஒய் பாலா, தன்னை பற்றி வரும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் பாலா. புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர், தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். மேலும் மலை கிராமங்களுக்கு தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வழங்கி வருகிறார்.
அதேபோல் கடந்த ஆண்டு சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட சுமார் 200 குடும்பங்களுக்கு தனது சொந்த பணத்தில் தலா ரூ1000 வழங்கியிருந்தார். பாலாவின் இந்த செயல் பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், முன்னணி நடிகர்கள் மீதான விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. தனது செயலை பாராட்டுபவர்களுக்கும் தனது எளிமையான நடத்தையின் மூலம் பதில் அளித்து வருகிறார்.
இதனிடையே பாலா, வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். இது பாலா கொடுக்கும் 5-வது ஆம்புலன்ஸ் ஆகும். 170-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், ஆம்புலன்ஸ் தேவையை உணர்ந்து தற்போது வழங்கியுள்ளதாக பாலா கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், கர்ப்பிணி பெண்கள், கயிறு கட்டிலில் வைத்து தூக்கிச்செல்லும் நிலை உள்ளது என்ற செய்தியை பார்த்தேன். இங்கு வந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது. கயிறு கட்டிலில் தூக்கிச்செல்லும்போதே சில பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது என்பதும் தெரிந்தது. இந்த கிராமத்திற்கு ஏறி வருவதே கஷ்டமாக இருக்கிறது.
இதன் காரணமாக 5-வது ஆம்புலன்ஸை இந்த கிராமத்திற்கு வழங்கியுள்ளேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆம் அவமானம் கஷ்டம் இவை தான் என் பின்னால் இருக்கிறது. இவைகள் தான் என்னை உதவிகள் செய்ய தூண்டிவிடுகிறது. எதிர்காலத்தில் நீ சிக்னலில் பிச்சை எடுப்பாய் அப்போது உன்னை பார்த்துவிட்டு நான் பிச்சை போடாமல் போவேன் என்று சிலர் சொல்கிறார்கள்.
நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறேனோ அந்த சிக்னலில் நான் கொடுத்த ஆம்புலன்ஸூம் வரும் அதனால் எனக்கு அது பிரச்சனை இல்லை என்று கூறி தன்னை பற்றி விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.