தன்னை குறித்து அவதூராக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகை த்ரிஷா வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இது குறித்து மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்.
திரைப்படங்களில் பாலியல் பலாத்கார காட்சி வைக்கமாட்டேன்கிறார்கள். த்ரிஷாவுடன் நடிக்க போறோம் என்றவுடன் ஆசையாக இருந்தது ஒரு ரேப் சீசன் இருக்கும், குஷ்பு ரோஜாவை தூக்கி போட்ட மாதிரி த்ரிஷாவை தூக்கி போடலாமா என்று நினைத்தேன். 150 படங்களில் நான் பார்க்காத ரேப்பா என்று மன்சூர் அலிகான் பேசியிருந்தார். இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
இது குறித்து பலரும் இணையத்தில் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்த நிலையில், நடிகை த்ரிஷாவும், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். மன்சூர் அலி கான் என்னை பற்றி அறுவறுக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ பதிவு ஒன்று என் கவனத்திற்கு வந்தது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது அவமரியாதையான பெண் வெறுப்புமிக்க பாலியல் அத்துமீறல் பேச்சு. அவர் இதற்கெல்லாம் ஆசைப்படலாம்.
ஆனால் இவ்வளவு மோசமான ஒருவருடன் திரையை பகிர்ந்து கொள்ளாததற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இனி என் திரை வாழ்க்கையில், இது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். இவரைப்போன்ற நபர்கள் மனித குலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என்று பதிவிட்டிருந்தார். இதில் மன்சூர் அலிகான் பேச்சுக்கு அவரது தீவிர ரசிகரும் இயக்குனருமான லோகேஷ் கனகராஜூம் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே தற்போது இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள மன்சூர் அலிகான்,
'அய்யா' பெரியோர்களே. திடீர்னு த்ரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு, பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல, நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடுறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவி விட்டுருக்கானுக. உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஞ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க.
பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்லன்னு ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சறவனா? த்ரிஷாக்கிட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா, என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்எல்ஏ, எம்.பி, மந்திரின்னு ஆயிட்டாங்க. பல கதாநாயகிகள் பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க.
மேலும், ‘லியோ’ பூஜையிலேயே என் பொண்ணு தில்ரூபா உங்களோட பெரிய ரசிகைன்னு த்ரிஷாக்கிட்ட சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும். 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கறவன் என எல்லாருக்கும் தெரியும். த்ரிஷாக்கிட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது. உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“