அனுமதி இன்றி தனது பெயர் புகைப்படம் மற்றும் குரலை பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என்று முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தில் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில், நெல்சன் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.
பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இளம்பாரதி தரப்பில் இருந்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அனுமதியின்றி ரஜினிகாந்தின் குரல், பெயர், புகைப்படம் ஆகியவற்றை வணிக ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் ரஜினிகாந்தின் அனுமதி இன்றி அவரின் குரல், புகைப்படங்கள் மற்றும் பெயரை பயன்படுத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் இந்த நோட்டீஸ் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/