மலையாள திரையுலகில், நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கை கேரளா மட்டுமல்லாமல், தென்னிந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அறிக்கையின் காரணமாக தான் பெரிய மன உளைச்சலில் இருப்பதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்கொடுமைகள், மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கேரளா அரசு அமைத்த ஹேமா கமிட்டி கடந்த 2019ம் ஆண்டு தங்களது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், இந்த அறிக்கை 5 வருட இடைவெளிக்கு பின் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை வெளியானது முதல் மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், நடிகர் ரஞ்சித் மற்றும் சித்திக் ஆகியோர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பல உச்ச நடிகர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து தலைவர் மோகன்லால் உட்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், நடிகரும், எம்.எல்.ஏவுமான முகேஷ் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதனிடையே, மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து வெளியான அறிக்கையின் காரணமாக தான் மன உளைச்சலில் இருப்பதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஹேமா கமிட்டி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் உள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் திரையுலகில், பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும். மீண்டும் பாலியல் அத்துமீறல் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளா அரசுக்கு அமலாபால் கோரிக்கை வைத்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்ற அமலாபால் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த தகவலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“