மக்களுக்கு ஆதரவைாக இருந்து அரசின் திட்டங்களை பாராட்ட நினைத்தால் பாராட்டுக்கள். பாராட்ட மனமில்லை என்றால் அமைதியாக இருங்கள். பிச்சை என்று அவமானப்படுத்தும் சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று நடிகை அம்பிகா கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க சார்பில், போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி செங்குன்றத்தில் நேற்று முன்தினம், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, பா.ஜ.க பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, தமிழக அரசு சார்பில் மகளிருக்கு வழங்கப்படும் ரூ1000 ஊக்கத்தொகை குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
தாய்மார்களுக்கு ரூ1000 கொடுத்தால், பிச்சை போட்டா, அவர்கள் உங்களுக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா என்று இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். குஷ்புவின் இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தி.மு.க மற்றும் எதிர்கட்சிகள் குஷ்புவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்
தனது பேச்சுக்கு விளக்கம் அளித்திருந்த குஷ்பு, எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு இலவச உணவு திட்டத்தை கொண்டு வந்தபோது, அதை பிச்சை என்று மாறன் விமர்சித்திருந்தார். அதை யாரும் கண்டித்ததாக தெரியவில்லை. பெண்கள் ஓசி பயணம் செய்கிறார்கள் என்று, பொன்முடி சொன்னபோதும், மதுரை ஐக்கோர்ட் கிளை கருணாநிதி போட்ட பிச்சை என்று எ.வ.வேலு சொன்னபோது நீங்கள் கண் தெரியாதவர்களாக இருந்தீர்களா?
டாஸ்மாக் கடைகளில் செலவழிக்கும் பணத்தை சேமிக்க குடும்ப பெண்களுக்கு உதவுங்கள். பெண்களை சுதந்திரமாக்குங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்தை விட, மது பிரியர்களால் பெண்கள் படும் சிரமம் அதிகம் என்று பேசியிருக்கிறார். ஆனாலும் குஷ்புவின் பேச்சுக்கு கடும் கண்டணங்களும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை அம்பிகா குஷ்புவின் பேச்சுக்கு கடுமையாக விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
யாராக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் உதவி செய்தாலோ, அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ, அதனை ஏற்றுக்கொண்டு பாராட்டுங்கள். பாராட்ட மனமில்லை என்றால் அமைதியாக இருங்கள். பிச்சை என்று அவமானப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். 5 ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான் என்று கூறியுள்ளார். அம்பிகாவின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், குஷ்புவுக்கு எதிராக நெட்டிசன்கள் கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“