கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரை பறிகொடுத்த நடிகை மீனா விரைவில் 2-வது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து மீனா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. ரஜினி,கமல், அஜித், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தற்போதும் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளம் மற்றும் தெலுங்கில் வெளியான த்ரிஷ்யம் 2 படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது தெலுங்கில் சன் ஆஃப் இந்தியா, தமிழில் ரவுடி பேபி, மலையாளத்தில் ஜனம்மா டேவிட்ட உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் வித்யாசாகர், நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல் கிடைக்காததால்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த இழப்பில் இருந்து மீனா தற்போது மீண்டு வந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக அவர் மறுமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு மீனா தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகிவில்லை. ஆனாலும் சமுகவலைதளங்களில் மீனா இரண்டாவது திருமணம் தொடர்பான செய்திகள் பெரிய வைரலாக பரவியதை தொடர்ந்து தற்போது மீனா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அவர் என் மனதை விட்டு மறையவில்லை. அவர் என்னை விட்டு பிரிந்து 5 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இரண்டாவது திருமணம் குறித்து பேசுவது மனதளவில் காயத்தை ஏற்படுத்துகிறது. இப்போது என் கவனம் முழுவதும் என் மகளின் வாழக்கையிலும், நடிப்பின் மீது மட்டுமே உள்ளது.
இது போன்று ஆதாரம் இல்லாமல் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். என்று இரண்டாவது திருமணம் தொடர்பான வதந்திக்கு நடிகை மீனா முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.