சென்னை கே.கே.நகரில் இருந்த ரூ100 கோடி மதிப்பிலான வீட்டை இழந்து குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்றோம் என சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை சீரியலிகளில் நடிகர்களை விட நடிகைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் வில்லியாக நடிக்கும் நடிகைகளுக்கு தனி வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று. அந்த வகையில் வில்லி நடிகைக்கு பெயர் பெற்றவர்தான் சாந்தி வில்லியம்ஸ்.
சீரியலில் மருமகளை கொடுமைபடுத்தும் மாமியார் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தும் நடிகை என்றால் அதில் முக்கியமானவர் சாந்தி வில்லியம்ஸ் என்று சொல்லலாம். மலையாளத்தில் ஆவணப்படம் ஒன்றில் அறிமுகமான சாந்தி வில்லியம்ஸ் தொடர்ந்து சிவாஜி நடிப்பில் வெளியான வியட்நாம் வீடு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன்பிறகு மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நாயகியாக நடித்துள்ள சாந்தி வில்லியம்ஸ் தொடர்ந்து தமிழில் ஜெனரல் சக்ரவர்த்தி, ஜென்டில்மேன், ஜோடி, சொல்லாமலே உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸியாக நடித்து வந்தாலும் சாந்தி வில்லியம்ஸ் 2000-ம் ஆண்டு சித்தி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து மெட்டிஒலி சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தார். கோவையை சேர்ந்த சாந்தி வில்லியம்ஸ் கடந்த 1979 ஆம் ஆண்டு மலையாள கேமராமேன் ஜெ வில்லியம்ஸை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். தற்போது சாந்தி வில்லியம்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் அம்மாவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சாந்தி வில்லியம்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், என் கணவருக்கு கார்கள் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டை சுற்றி அத்தனை கார்கள் இருக்கும். கார்களை குழந்தைகளாகவே பார்க்கும் பழக்கம் உள்ளவர். ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு காரில் சென்றால் என் கணவரின் காரை எடுத்துக்கொண்டு நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள் சுற்றி பார்க்க கிளம்புவார்கள். 1996 க்கு முன்பு படங்களை எடுத்து நஷ்டமாகிவிட்டது. அப்போது கே.கே.நகரில் எனது சொந்த வீட்டை இழந்து குழந்தைகளுடன் நானும் அவரும் நடுரோட்டில் நிற்கிறோம்.
அன்று நாங்கள் இழந்த வீட்டின் இன்றைய மதிப்பு ரூ 100 கோடி. என் கணவர் நல்ல நிலையில், இருந்த காலக்கட்டத்தில எங்கள் வீட்டுக்கு வந்த பல முன்னணி நடிகர்கள் நாங்கள் வீழ்ந்தவுடன் ஒருவர் கூட திரும்பி பார்க்கவில்லை. அப்போது எங்களுக்கு உதவி செய்தவர் ரஜினிகாந்த் சார் மட்டும் தான். அவரும் என் கணவரும் ஒருகாலத்தில் ரூம்மெட்டாக இருந்தவர்கள். எப்போதும் ஒரு மனிதன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குவது எளிது. ஆனால் மீண்டும் பழைய நிலையை அடைய கஷ்டப்பட வேண்டும்.
அப்படித்தான் நானும் அன்று என் கணவர், குழந்தைகளுக்காக சீரியலில் நடித்து முன்னுக்கு வந்தேன். இன்று எனது பேரன் பேத்திகளுக்காக நடித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil