சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தை தவறாக எடுத்து வைத்திருக்கிறார்கள். ஜெமினியால் தான் அவர் கெட்டுப்போனார் என்பது உண்மை இல்லை என்று பழம்பெரும் நடிகை சவுக்கார் ஜானகி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி முண்ணணி நடிகர்களாக இருந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் சவுகார் ஜானகி. குறிப்பாக, சிவாஜியுடன், உயர்ந்த மனிதன், புதிய பறவை, பாவை விளக்கு, பாலும் பழமும் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சவுகார் ஜானகி, எம்.ஜி.ஆருடன் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
மாடப்புறா என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க சவுக்கார் ஜானகிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது சவுக்கார் ஜானகி கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்ததால், படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, 1965-ம் ஆண்டு வெளியான பணம் படைத்தவன் என்ற படத்தில் சவுக்கார் ஜானகி எம்.ஜி.ஆருடன் மீண்டும் இணைந்து நடித்தார்.
சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சவுக்கார் ஜானகி, சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்து பேசியுள்ளார். நான் முதன் முதலில் நடிக்க வந்தபோது, எனக்கு இரு குழந்தைகள். சாப்பாட்டுக்கு வழியில்லை. முதல் படத்தின் படப்பிடிப்பின்போது செட்டில் மயங்கி விழுந்துவிட்டேன். அப்போது, ஜெமினி வந்து இவருக்கு எவ்வளவு பேசியிருக்கிறோம் என்று கேட்க ரூ7500 என்று சொல்லியிருக்கிறார்.
அதை கேட்ட அவர் மொத்த பணத்தையும் கொடுத்துவிடுங்கள் நல்ல முகம். சிறப்பாக நடிக்கிறார். எதிர்காலத்தில் பெரிய நடிகையாக வருவார் என்று சொன்னார். ஆனால் அப்படிப்பட்ட ஜெமினியால் தான் சாவித்ரி கெட்டுப்போனார் என்று மகாநடி படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஜெமினி அப்படிப்பட்டவர் அல்ல. அவருக்கு சில பலவீனங்கள் இருந்திருக்கலாம். இங்கு பலவீனம் இல்லாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? இங்கிருக்கும் அரசியல்வாதிகளின் பயோபிக் எடுத்தால் நாறிப்போய்விடும்.
சாவித்ரியின் வாழ்க்கை வராலாறு படத்தை நாக் அஸ்வின் என்ற இயக்குனர் எடுத்துள்ளார். அவரின் இயக்கத்தில் எவடே சுப்ரமணியம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தேன்.. அப்போது அவர் சாவித்ரி பற்றி கேட்டுக்கொண்டே இருப்பார். இவர் எதற்காக கேட்கிறார் என்று யோசித்தேன். அதன்பிறகு தான் அவரை பற்றி படம் எடுத்திருக்கிறார் என்று தெரிந்தது. அந்த படததில் சாவித்ரி குறித்து தவறாக படம் எடுத்திருக்கிறார்கள்.
படத்தை என்னை பார்க்க சொன்னார்கள். நான் பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டேன். படத்தில் என்னை பற்றி கூட பேசியிருப்பதாக என்னிடடம் பலர் சொன்னார்கள். அதனால் பயோபிக் என்பது தேவையில்லாத ஒன்று.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“