மன்சூர் அலி கான் போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என்று நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள கண்டன பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த மாதம் 19-ந் தேதி வெளியானது. த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், மன்சூர் அலி கான் விஜயின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் லியோ படம் உலகளவில் 500 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.
மேலும் அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் வரிசையில் 3-வது இடம் லியோ படத்திற்கு கிடைத்துள்ளது. இதனிடையே சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலி கான், படத்தில் பாலியல் வன்முறை செய்ய விடமாட்டேன் என்கிறார்கள். எனக்கு ஆசையாக இருந்தது. கட்டிலில் குஷ்பு ரோஜாவை கடத்தியது போல் த்ரிஷாவையும் போடலாமா என்று நினைத்தேன். 150 படங்களில் நான் செய்யாத ரேப்பா என்று தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார்.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தற்போது நடிகை த்ரிஷா மன்சூர் அலி கான் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கததில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில், சமீபத்தில் மன்சூர் அலி கான் என்னை பற்றி அறுவறுக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ பதிவு ஒன்று என் கவனத்திற்கு வந்தது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது அவமரியாதையான பெண் வெறுப்புமிக்க பாலியல் அத்துமீறல் பேச்சு. அவர் இதற்கெல்லாம் ஆசைப்படலாம். ஆனால் இவ்வளவு மோசமான ஒருவருடன் திரையை பகிர்ந்துகொள்ளாததற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இனி என் திரை வாழ்க்கையில், இது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். இவரைப்போன்ற நபர்கள் மனித குலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இதற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“