/indian-express-tamil/media/media_files/2024/12/07/BNxNtFcclP35DdzGOXKG.jpg)
சாதாரண குடும்பத்தில் பிறந்து, விமான பணிப்பெண்ணாக பணியாற்றி தற்போது திரைத்துறையில் பல படங்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் தனது திரையுலக பயணம் குறித்து பேசியுள்ளார்.
2010-ம் ஆண்டு வெளியான ஓர் இரவு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வாணி போஜன். அதன்பிறகு 2012-ம் ஆண்டு அதிகாரம் 79 என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்து சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரை பக்கம் திரும்பிய வாணி போஜன் ஆஹா என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார்.
சன்டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பிறகு 2020-ம் ஆண்டு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்டரி ஆன வாணி போஜனுக்கு ஓ மை கடவுளே படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்து லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, மிரள், ராமன் ஆண்டளும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். விக்ரம் பிரபுவுடன் பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ள வாணி போஜன் அடுத்து ஆரியன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, விமான பணிப்பெண்ணாக இருந்த தான் சினிமாவில் நுழைந்தது எப்படி என்பது குறித்து, யூடியூப் சேனலுக்கு அளித்த போட்டி ஒன்றில் வாணி போஜன் கூறியுள்ளார்.
சின்ன வயதில் இருந்து மாடலிங் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். எனது அப்பா ஒரு திறமையாக போட்டோஃபிராபர். நான் சிறுவயதில் இருக்கும்போது வீட்டுக்கு வரும் மளிகை சாமான்களில், உப்பு, மிளகாய்தாள் உள்ளிட்ட பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு போஸ் கொடுப்பேன். அப்போது என் அப்பா என்னை ஃபோட்டோ எடுப்பார். என் அப்பாவின் மாடல் நான் தான். ஃபோட்டோ எடுக்கும்போது நானும் அவருக்கு சின்ன சின்ன ஐடியாக்கள் கொடுப்பேன்.
2 வயதில் இருந்து நான் இதை செய்தது என் மூளையில் ரிஜிஸ்டர் ஆகியிருந்தது என்று நினைக்கிறேன். அதனால் தான் இங்கு வந்திருக்கிறேன். நான் இருந்த ஊட்டி ஒரு சிறிய டவுன். அங்கு சினிமா என்பது பலருக்கும் தெரியாது. தியேட்டரே இல்லாத காலக்கட்டம். எங்கள் வீட்டில் மேகஸீன்ஸ் படிக்கும் பழக்கம் இருக்கிறது. நான் 9-10-ம் வகுப்பு படிக்கும்போது சிம்ரன் மாதிரி இருக்கிறேன் என்று சொல்வார்கள்.
அப்படி ஒருநாள் ஒரு மேகஸீனில் சிம்ரன் போட்டோ வந்தபோது, அதை எடுத்து கொண்டு கண்ணாடி முன்பு நின்று நானும் சிம்ரனும் ஒரே மாதிரி இருக்கோமா என்று பார்த்தேன். அதன்பிறகு ஒரு விழாவில் சிம்ரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பேச முடியவில்லை என்றாலும், அவர் என்னை தொட்டதை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். அவர் எனக்கு கை கொடுத்திருந்தால் நான் குளித்திருக்கவே மாட்டேன் என்று வாணி போஜன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.