தனது சினிமா வாழ்க்கை மற்றும் தன்னை பற்றிய வதந்திகள் குறித்து நடிகை விசித்ரா மனம் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுடன் பல காமெடி காட்சிகளிலும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை விசித்ரா. 1991-ம் ஆண்டு வெளியான பொற்கொடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், சத்யராஜுன் 100-வது படமாக வில்லாதி வில்லன் படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் விசித்ரா நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய விசித்ரா தற்போது மீண்டும் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று 3-வது இடம் பிடித்த விசித்ரா, ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார், மேலும் அடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விசித்ரா பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சமீபத்தில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து பேசிய விசித்ரா, நான் நடிகர் கவுண்டமணியோடு பல படங்களில் நடித்திருக்கிறேன். நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பெரிய குடும்பம் திரைப்படத்தில் நடிக்க இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். அந்த படத்தின் பூஜையிலும் நான் பங்கேற்றிருந்தேன். அந்த நேரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் என் முன் கையை பிசைந்துகொண்டிருந்தார்.
எதோ சொல்ல வருகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, திடீரென என்னிடம் வந்து உனக்கும் கவுண்டமணி சாருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்க, நான் ஒன்றும் இல்லையே என்னாச்சு, ஏன் இப்படி கேட்குறீங்க என்று கேட்டேன். அதற்கு அவர் அப்போ வா என்று கூட்டிக்கொண்டு போய் கவுண்டமணி சாருக்கு ஒரு வணக்கம் சொல் என்று சொன்னார். அவர் வரும்போது ஏற்கனவே வணக்கம் சொல்லிவிட்டேன் என்று சொன்னேன்.
அது பரவாயில்லை இப்போ சொல்லு என்று கே.எஸ்.ரவிக்குமார் சொல்ல, சார் வணக்கம் என்று நான் சொல்ல பதிலுக்கு கவுண்டமணி சாரும் வணக்கம் சொன்னார். ஏற்கனவே ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் அவருக்கு வணக்கம் சொல்லவில்லை. அது எப்போது என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் அதை மனதில் வைத்துக்கொண்டு என்னுடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். நான் பேசியதும் பிரச்சனை முடிந்தது. கவுண்டமணி சார் இப்படிப்பட்ட கேரக்டர் தான். அதே நேரத்தில் அவருக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது என்றெல்லாம் வதந்திகள் பரவியது.
இந்த வதந்திகள் எல்லாமே பொய். சினிமாவில் இப்படி வதந்திகள் வருவது சகஜம். அதேபோல் மூன்று நான்கு படங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் கே எஸ் ரவிக்குமார் சாருக்கும் எனக்கும் ஏதோ கனெக்சன் என்று சொன்னார்கள். என்னை பலருடன் சேர்த்து வதந்தி பரப்பினாங்க என நடிகை விசித்திரா கூறியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“