/indian-express-tamil/media/media_files/ZVAtNFeTUNHzVje6ZUYV.jpg)
என் உயிர் தோழன் பாபு
படப்பிடிப்பின்போது காயமடைந்து 30 வருடங்களாக படுக்கையில் இருந்த நடிகர் என் உயிர் தோழன் பாபு இன்று மரணமடைந்தார். திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 1990-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான என் உயிர் தோழன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாபு. அந்த படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து என் உயிர் தோழன் பாபு என்று அழைக்கப்பட்ட அவர், தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
தொடர்ந்து மனசார வாழ்த்துங்களேன் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சிக்காக மேலே இருந்து குதிக்கும் காட்சியில், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக டூப் போடாமல் தானே நடிப்பதாக கூறியுள்ளார். படக்குழுவினர் எவ்வளவோ தடுத்தும் பிடிவாதமாக அந்த காட்சியில் நடித்த பாபு, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து முதுகெலும்பு உடைந்து படுகாயமடைந்தார்.
அன்றில் இருந்து கடந்த 30 வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்த பாபு, இடையில் டிவியில் பேட்டிககள் கொடுத்திருந்தார். இயக்குனர் பாரதிராஜா அவரை நேரில் சென்று பார்த்து வந்தார். இத்தனை ஆண்டுகாலம் படுத்த படுக்கையாக இருந்த நடிகர் பாபுவை 80 வயதான அவரது அம்மா கவனித்து வந்த நிலையில், இன்று பாபு மரணமடைந்தார். பாபு முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜாராமின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பாபுவின் மரணத்திற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.