scorecardresearch

திறமை, பொறுமை, வறுமை… மேடையில் அபூர்வமாக பேசிய கவுண்டமணி: குலுங்கி சிரித்த குஷ்பு, நயன்தாரா

படங்களில் நடிகர்களுக்கு கவுண்டர் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் நிஜவாழ்க்கையிலும் எதார்த்தத்தை கடைபிடித்தவர் கவுண்டமணி.

Goundamani
நடிகர் கவுண்டமணி

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என்று எடுத்துக்கொண்டால் நிச்சயமாக கவுண்டமணி என்ற பெயரை சொல்லாமல் இருக்கவே முடியாது. 1964- ம் ஆண்டு நாகேஷ் நடிப்பில் வெளியான சர்வர் சுந்தரம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கவுண்டமணி தனது காமெடி மற்றும் கவுண்டர்களால் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன், அர்ஜூன், சரத்குமார், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல், சிம்பு உள்ளிட்ட இன்றைய தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதேபோல் தமிழ் சினிமாவில் செந்தில் – கவுண்டமணி காமெடிக்கு இன்றளவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

படங்களில் நடிகர்களுக்கு கவுண்டர் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் நிஜவாழ்க்கையிலும் எதார்த்தத்தை கடைபிடித்தவர் கவுண்டமணி. அதேபோல் தனக்கு ரசிகர்கள் மன்றங்கள் வேண்டாம் என்று அப்போதே உதறி தள்ளிய கவுண்டமணி தற்போது வயது முதிர்வு காரணமாக நடிப்பில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வருகிறார்.

இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு கவுண்டமணி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இதில் ஒருவன் ரோட்டில் நடந்து போனான் அப்போது ஒருவன் வந்து தம்பி எங்க போற என்று கேட்க நான் சினிமாவில் நடிக்க போகிறேன். என்று சொன்னார். அதற்கு அவன் என்னையும் அழைத்து போ என்று சொல்ல நீ யார் என்று கேட்டான்.

நான் தான் அவமானம் என்னை சந்திக்காமல் நீ எங்கும் செல்ல முடியாது. உன் பின்னாடியே வருவேன். அப்பப்போ உன்னை தொட்டுக்கொள்வேன் கண்டுக்காதே என்று சொன்னார். அதன்பிறகு அவன் நடந்து போய்க்கொண்டிருக்க மற்றொருவன் எதிரில் வந்தான். எங்கே போற என்று கேட்க சினிமாவில் நடிக்க போகிறேன் என்று சொன்னான். அப்படி என்றால் என்னையும் அழைத்து போ என்று சொல்ல நீ யார் என்று கேட்டான்.

நான் தான் அதிஷ்டம் என்று சொன்னான். உடனே நீ வா என்று உற்சாகமாக அவனை அழைத்துக்கொண்டு செல்லும்போது சைடில் இருந்து ஒருவன் வந்து என்னையும் அழைத்துபோ என்று சொன்னான். எனக்கு அதிஷ்டமே இருக்கு நீ எதுக்கு என்று சொல்விட்டு போய் அதிஷ்டத்தின் உதவியால் ஒரு படம் நடித்தான். படம் வெற்றியாகவில்லை. சோகமாக நடந்து வந்துகொண்டிருந்தான்.

அப்போது சைடில் இருந்து வந்தவன் திரும்பவும் வந்து அப்பவே சொன்னனே என்னை அழைத்து போ என்று சொன்னான் நீ யார் என்று கேட்டபோது நான்தான் திறமை என்று சொன்னான். சினிமாவில் நுழைய அதிஷ்டம் இருந்தால் போதும். ஆனால் நிலைத்து நிற்க திறமை வேண்டும் திறமையோடு கொஞ்சம் பொறுமை இருந்தால் வறுமையே நம் வாழ்வில் இருக்காது என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சூர்யா, கார்த்தி, குஷ்பு நயன்தாரா, அர்ஜூன், சிபிராஜ், விவேக் உள்ளிட்ட பலர் பங்கேற்றுளளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor goundamani speech in cinema function

Best of Express