தென்னிந்திய திரையுலகில், சில உறவுகள் சினிமாவை கடந்து, பல தசாப்தங்களாக நிலைத்திருக்கும். அத்தகைய ஓர் அரிய நட்பின் வெளிப்பாடாக, உலக நாயகன் கமல்ஹாசன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் 40 ஆண்டுகால திரைப்பயணத்தை மனதாரப் பாராட்டி, ஓர் உணர்வுபூர்வமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வாழ்த்துச் செய்தி, "கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது" என்ற கமலின் சர்ச்சைக்குரிய கருத்து மற்றும் அதன் காரணமாக அவரது 'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் வெளியாக தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கமலின் வாழ்த்து கவனம் ஈர்த்துள்ளது. கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனாக சிவராஜ்குமார் தனது திரையுலக மைல்கல்லைக் கொண்டாடும் வீடியோவில், கமல்ஹாசன் ராஜ்குமார் குடும்பத்துடனான தனது ஆழமான பிணைப்பைப் பற்றி பேசினார். "நீங்கள் அவரை என் தம்பி என்றோ, மகன் என்றோ அழைக்கலாம். நீங்கள் என்னை அவரது (டாக்டர் ராஜ்குமார்) இளைய சகோதரன் என்றோ, மகன் என்றோ அழைக்கலாம். எப்படிப் பார்த்தாலும், சிவண்ணா என் குடும்பம். இதை நான் இந்த வீடியோவுக்காக மட்டும் சொல்லவில்லை, இது 50 ஆண்டுகளாக இருந்து வரும் உறவு," என்று கமல் தமிழில் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
டாக்டர் ராஜ்குமார் தன்னை அரவணைத்த விதத்தைப் பற்றிப் பேசிய கமல், "ராஜ்குமார் அண்ணா என் மீது காட்டிய அன்பு, நான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று. காரணம், நாங்கள் அனைவரும் ஒரே ஸ்டுடியோவில் அவரது அரவணைப்பில் வளர்ந்தவர்கள்." சிவ ராஜ்குமாரைப் பற்றிப் பேசியபோது, "சிவண்ணாவின் 40 ஆண்டுகால பயணம் இவ்வளவு விரைவாக எப்படிச் சென்றது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் என்னை ஒரு ரசிகராக அறிமுகப்படுத்திக் கொண்டார். இன்று அவர் ஒரு நட்சத்திரமாக, தன் தந்தையின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு சூப்பர் ஸ்டாராக வளர்ந்துள்ளார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம்," என்று புகழ்ந்தார்.
தொடர்ந்து, கமல் சுருக்கமாக கன்னடத்திற்கு மாறி, "சிவண்ணா, நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். கவனமாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், மேலும் பல படங்களில் நடியுங்கள். உங்கள் 50வது ஆண்டு விழாவில் நாம் மீண்டும் பேசுவோம் - நாம் இருவரும் ஒன்றாக. நான் எப்போதும் இருப்பேன், நமது அன்பும் அப்படியே இருக்கும். அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்," என்று தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
"கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது" என்ற கமல்ஹாசனின் கருத்து, கன்னட அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர் மன்னிப்பு கேட்க மறுத்ததால், பல கன்னட ஆதரவு குழுக்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தின. இதன் விளைவாக, அவரது 'தக் லைஃப்' படத்தின் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த கருத்து சர்ச்சையின்போது, சிவராஜ்குமார் அருகிலிருந்ததால், அவரும் சர்ச்சைக்குள் இழுக்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, விமர்சகர்களிடம், கன்னட மொழி வளர்ச்சிக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்று சிவராஜ்குமார் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனைத் தவிர, தென்னிந்திய திரையுலகில் பல முன்னணி பிரபலங்களும் சிவராஜ்குமாரின் இந்த மைல்கல்லை வாழ்த்தினர். சிரஞ்சீவி, நாகார்ஜுனா, கிச்சா சுதீப், நானி, விஜய் தேவரகொண்டா மற்றும் துருவா சார்ஜா போன்ற நடிகர்கள் வீடியோ செய்திகள் மூலம் தங்கள் வாழ்த்துக்களை அனுப்பினர். இவர்களுடன், 'ஜெயிலர்' இயக்குனர் நெல்சன் மற்றும் 'புஷ்பா' இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரும் சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு, திரையுலகில் உறவுகளின் ஆழத்தையும், சர்ச்சைகள் மத்தியிலும் மனிதாபிமானம் மற்றும் கலை மீதான பரஸ்பர மரியாதை நிலைத்திருக்கும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.