/indian-express-tamil/media/media_files/2025/09/06/mic-mohan-kamal-haasan-2025-09-06-09-47-47.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்து வெள்ளி விழா நாயகன் என்று பெயரெடுத்த நடிகர் மோகன், தனது முதல் படத்திலேயே அப்போது பிஸியான நடிகராக வலம் வந்த கமல்ஹாசனை 3 நாட்கள் காக்க வைத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகர் மோகன். ஆனால் இவரை மைக் மோகன் என்று சொன்னால் தான் தமிழ் ரசிகர்களுக்கு தெரியும். இதற்கு முக்கிய காரணம், திரைப்படங்களில் இவர் கையில் மைக் எடுத்து பாடல் பாடினாலே அந்த படம் பெரிய வெற்றியை பெற்றுவிடும் என்பது தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட ஒரு தகவல். இதன் காரணமாக இவரை மைக் மோகன் என்று அழைத்தால் தான் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு பாடல் பாடியே தனது படத்திற்கு வெற்றிய உருவாக்கியவர்.
1977-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கோகிலா என்ற படம் தான் மோகன் அறிமுகமான முதல் படம். இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய இந்த படத்தில், கமல்ஹாசன், ஷோபா, ரோஜா ரமணி ஆகியோருடன், மைக் மோகன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், அடுத்து 3 ஆண்டுகள் கழித்து தான் மோகனுக்கு பட வாய்ப்பு கிடைத்தது. 1980-ம் ஆண்டு அதே பாலு மகேந்திரா இயக்கத்தில் தமிழில் வெளியான மூடுபனி படத்தில் பாஸ்கர் என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்,
அதன்பிறகு, பல வெற்றிப்படங்களை கொடுத்த மோகன், தனது முதல் படத்தில் கமல்ஹாசனையும், இயக்குனர் பாலுமகேந்திராவையும் காக்க வைத்த சம்பவம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். கோகிலா படத்தின் மூல் ஸ்கெடியூலில் 3 நாட்கள் நடித்திருந்தேன். அதன்பிறகு, நான் இருந்த ட்ராமா குருப் நண்பர்கள் ஒரு சினிமா எடுத்தார்கள். அப்போது நான் நடிகன் ஆகிவிட்டேன் என்பதால் என்னையும் அழைத்தார்கள் நானும் போய்விட்டேன். மைசூரில் இருந்து உள்ள காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.
அந்த நேரத்தில் கோகிலா படத்தின் 2-வது ஸ்கெடியூலுக்காக, பாலுமகேந்திரா, கமல்ஹாசன் ஆகியோர் மீண்டும் பெங்களூருக்கு வந்துள்ளனர். என்னை அழைக்க என் வீட்டுக்கு போன் செய்துள்ளனர். அப்போது என் அப்பா போனை எடுத்து, வழக்கம்போல் அவன் இல்லையே ஷூட்டிங் போய்ட்டான் என்று கூறியுள்ளார். இதை கேட்டு பாலுமகேந்திரா சார் ரொம்ப கோபப்பட்டுள்ளார். நம்ம படம் இருக்கும்போது அவன் எந்த ஷூட்டிங் போனான் என்று டென்ஷன் ஆகிவிட்டார், அந்த நேரத்தில் கமல் சார் ரொம்ப பிஸியான நடிகர். அவரது டேட் அவ்ளோ முக்கியம்.
நான் காராக்பூர் காட்டுக்குள் படப்பிடிப்பில் இருக்கிறேன். அப்போ டெலிகிராம் கொடுத்து என்னை வரவழைத்தார்கள். நான் வர 3 நாட்கள் ஆகிவிட்டது. நான் வந்தபோது உதவி இயக்குனர் என்ன இப்படி பண்ணிட்டீங்க என்று கேட்க, எனக்கு தெரியாதே என்று நான் சொன்னேன். எல்லாரோட சீனும் முடிந்தது. என் சீன் மட்டும் எடுக்கவே இல்லை. இன்னொரு டைரக்டர் கூப்பிட்டார். அதான் போய்விட்டேன் என்று நான் சொன்னபோது நீ எப்படி போகலாம் என்று பாலுமகேந்திரா கேட்டார்.
அப்போது கமல் சார் வந்து என்னிடம், நீ நல்லா நடிக்கிற அதெல்லாம் சரிதான், ஷூட்டிங் இருக்கா இல்லையானு நீதான் கேட்கணும் அவர் எப்படி சொல்வார்? இப்போ இருந்து டைரி வச்சிக்கோ, எப்பப்போ யார் யார் கூப்பிடுவா? எத்தனை நாள் தேவைப்படும் என்பதை குறித்து வைத்துக்கொள் என்று சொன்னார். அன்றில் இருந்து இதுவரை நான் ஷூட்டிங்கிற்கு தாமதமாக போனதே இல்லை என்று மோகன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.