தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் ரகுவரன். தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்த ரகுவரன் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தார்.
Advertisment
கடந்த 1982-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான காக்கா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ரகுவரன். அதன்பிறகு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த இவர், ஒரு ஓடை நதியாகிறது, முடிவல்ல ஆரம்பம், குற்றவாளிகள், சம்சாரம் அது மின்சாரம், பூவிழி வாசலிலே உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
தொடக்கத்தில் சில படங்களில் நாயகனாக நடித்த ரகுரவனுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதன்பிறகு வில்லனாக களமிறங்கிய அவர், ஊர்க்காவலன், மனிதன், காதலன், பாட்ஷா, முத்து, அருணாச்சலம், ரட்சகன், முதல்வன், உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக உருவெடுத்தார்.
ரகுவரன்
குறிப்பாக ரஜினியுடன் பாட்ஷா, அர்ஜூனுடன் முதல்வன் உள்ளிட்ட பல படங்கள் ரகுவரனின் நடிப்புக்கு முக்கிய சான்றாக உள்ளது. வில்லன் மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிப்பிலும் தனி முத்திரை பதித்துள்ள ரகுவரன், அஜித்துடன் முகவரி, மாதவனுடன் ரன், விஜயுடன் திருமலை உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
ஹீரோவாக வெற்றிபெறாத ரகுவரன் தனது வில்லத்தனத்தால் பெரும் புகழ் பெற்றிருக்கிறார் என்றால் அவரது அயராத உழைப்பும் நடிப்புக்காக எதையும் செய்யும் தைரியம்தான் காரணம். இதற்கு ஒரு சான்றாக புரியாத புதிர் படத்தில் நடந்த சம்பவத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்த கே.எஸ்.ரவிக்குமார் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ரகுவரன், இறந்துவிடுவது போல் காட்சி உள்ளது. இந்த காட்சியில் அவரது மனைவியாக நடித்த ரேகா பீரோவின் கதவை திறக்கும்போது அதில் இருந்து ரகுவரன் இறந்து விழுவார் அவரது கழுத்து அறுந்து ரத்தம் வரவேண்டும் இதுதான் காட்சி.
இந்த காட்சிக்காக ரகுவரனின் கழுத்தில் சிகப்பு சாயம் பூசப்பட்டது. ஆனால் அவருக்கு வியர்வை அதிகம் வந்ததால் சாயம் நிற்கவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் நிற்காததால், ஒரு கத்தியில் சிகப்பு பவுடரை வைத்து கழுத்தில் தேய்த்துக்கொண்டிருந்தார். இதை பார்த்த நான் அதிர்ச்சியில் என்ன பண்ற என்று கேட்டேன்.
ரத்த சாயம் நிற்கவில்லை. அதனால் கத்தியில் வைத்து கழுத்தியில் தேய்க்கிறேன் என்று சொன்னார். கொஞ்சம் அழுத்தி தேய்ச்சா சொத்துபோய்டுவ... எனக்கு முதல் படம் எதாவது விபரீதம் ஆகிவிட போகிறது என்று சொல்லி கத்தியை பிடுங்கிவிட்டேன். நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்வார் ரகுவரன் என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.