தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல் நடிகையர் திலகம் என்று அழைக்கப்பட்டவர் சாவித்ரி. பலருக்கும் உதவி செய்துள்ள இவர், மீன் கொண்டு வந்து கொடுத்த ஒருவருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து உபரித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தென்னிந்திய க்ளாசிக் சினிமாவில், நடிப்பில் உச்சம் தொட்டவர் நடிகை சாவித்ரி. 1951-ம் ஆண்டு வெளியான பாதாள பைரவி என்ற படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமான இவர், 1952-ல் வெளியான கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சாவித்ரி, பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக சிவாஜியுடன் இவர் நடித்த பாசமலர், மற்றும் பாவ மன்னிப்பு உள்ளிட்ட பல திரைப்படங்கள் சாவித்ரிக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது. 1953-ம் ஆண்டு வெளியான மனம்போல் மாங்கல்யம் என்ற படம் தான் ஜெமினி கணேசன் சாவித்ரி இணைந்து நடித்த முதல் திரைப்படம். பிஇந்த முதல் படத்திலேயே ஜெமினி கணேசன் – சாவித்ரி இடையே காதல் மலர்ந்துள்ளது.
அதன்பிறகு தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி ஜெமினி கணேசனை திருமணம் செய்துகொண்ட சாவித்ரி, ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். ஆனாலும் தன்னை சுற்றி உள்ளவர்கள் மற்றும் தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையுடன் இருந்த சாவித்ரி, தனக்கு மீன் கொண்டு வந்து கொடுத்த ஒரு நபருக்கு இரவில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.
இது குறித்து நடிகர் ராஜேஷ் ஒரு நேர்காணலில் பேசும்போது, 1971-ல் ப்ராப்தம் ஷூட்டிங ஒரு கிராமத்தில் நடந்தபோது, சாவித்ரிக்கு பல உதவிகள் செய்தவர் என் நண்பர் சூர்யகாந்த். இவரின் உதவும் குணத்தை பார்த்த சாவித்ரி, மெட்ராஸ் வந்தால் என்னை வந்து பாருப்பா என்று கூறியுள்ளார். அதன்படி ஒருமுறை, கட்லா என்ற பெரிய மீனை எடுத்தக்கொண்டு சூர்யகாந்த் சாவித்ரி வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் வீட்டுக்கு சென்ற நேரம் மாலை 4 மணி.
இந்த நேரத்தில் வந்த சூர்யகாந்தை சாப்பிட்டுவிட்டுதான் போக வேண்டும் என்று, சாவித்ரி கட்டாயப்படுத்தி அங்கேயே அமர வைத்துள்ளார். அதன்பிறகு அவர் கொண்டுவந்த மீனை சமைத்து அவருக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். அவர் சாப்பிட்டு முடிக்க, மணி 8 ஆகிவிட்டது. இதற்கு மேல் நீ ஊருக்கு போக வேண்டாம் நாளைக்கு போய்க்கலாம் என்று சொல்லி, தனது வீட்டில் ஒரு அறையில் தங்க வைத்து மறுநாள் காலை காபி கொடுத்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
என் நண்பன் சூர்யகாந்த், பெண்கள் எல்லோரையும் பார்க்கும் குணம் உள்ளவர். 1971-ல் சாவித்ரிக்கு 38-39 வயது இருக்கும். அதனால் நீ என்ன ஃபீல் பண்ண, சாவித்ரி அம்மாவை எப்படியா பாத்த என்று நான் அவரிடம் கேட்டபோது, என்னை பெற்ற தாய் மாதிரி என்று சொன்னார். மீன் கொண்டு வந்து கொடுத்தவனை நன்றி மட்டும் சொல்லிவிட்டு அனுப்பி இருக்கலாம்.ஆனால் அதை செய்யாமல், சமைத்து சாப்பிட வைத்து பாதுகாப்பாக காலையில் அனுப்பியுள்ளார் என்று நடிகர் ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார். சூர்யகாந்த் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“