தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் பி யு சின்னப்பாவின் குடும்பம் சொத்துக்களை இழந்து வறுமையில் வாடியபோது நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் தெரியாமல் உதவி செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் என்ற பட்டத்துடன் வலம் வந்த பியு சின்னப்பா கடந்த 1936-ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து பிரித்விராஜன், மனோன்மணி, ஜகதல பிரதாபன், ரத்னகுமார், வனசுந்தரி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக கடந்த 1951-ம் ஆண்டு வெளியான சுதர்சன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
20 வயதில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய பியு சின்னப்பா தனது 36-வது வயதில் 1951-ம் ஆண்டு சென்னையில் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பின் அவரது குடும்பத்தினர் வறுமையில் வாடிய நிலையில், அந்த குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பல உதவிகளை செய்துள்ளதாக பழம்பெரும் நடிகர் கலைஞானம் கூறியுள்ளார். இது தொடர்பான அவர் பேசியுள்ள ஒரு வீடியோ பதிவில்,
பியு சின்னப்பா இறந்து 5 வருடத்திற்கு பிறகு அவரது மனைவி சகுந்தலா மைசூருக்கு தனது மகனுடன் ஷூட்டிங் வந்திருந்தார். அவருடன் சேர்ந்து அந்த படத்தில் நானும் நடித்திருந்தேன். அப்போது அவரை தனியாக சந்திக்க முயற்சி செய்து அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்றுவிட்டேன் என்னை பார்த்த அவர், யார் நீங்க என்று கேட்க நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் பராசக்தி படத்தில் பூசாரியாக நடித்தாரே அவரின் சித்தி பையன் என்று சொன்னேன்.
உடனே என்னை மதித்து உட்கார வைத்து பேசினார். அப்போது சில விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். இதை காமாட்சியின் தம்பி எனபதால் உன்னிடம் சொல்கிறேன். வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம். நான் அடுத்து மெட்ராஸில் தங்க போகிறேன். முடிந்தால் என்னை வந்து பாரு என்று சொன்னார். அதோடு அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அதன்பிறகு பல வருடங்கள் கழித்து 1984-ல் மிருதங்க சக்ரவர்த்தி என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது பியு சின்னப்பாவின் மகன் பூபதி ராஜா வளர்ந்து வந்துவிட்டார். அதற்கு முன்பு 50-க்கு மேற்பட்ட கதைகளை எழுதி திரைத்துறையில் பலரை அறிமுகம் செய்து வைத்துவிட்டேன். அப்போது பியு சின்னப்பா மகன் நடிக்க வாய்ப்பு கேட்டு என்னிடம் வந்தார். வந்து என்னை பார்த்து கும்பிட்டவுடன் நீ யாருப்பா என்று கேட்டேன். நான் பியு சின்னப்பா மகன் என்று சொன்னார். எனக்கு தூக்கி வாரி போட்டது.
அப்போது எதாவது வேஷம் இருந்தால் கொடுங்கள் என்று சொன்னதும் அதை விட தூக்கி வாரி போட்டது எனக்கு. பியு சின்னப்பாவை நான் தேடி போன காலம்போய் இப்போது அவரது மகன் என்னை தேடி வந்திருக்கிறார். இதுதான் உலக வாழ்க்கை. அதன்பிறகு பியு சின்னப்பா மகனும் நடுத்தர வயதில் இறந்துவிட்டார். அப்போது அவருக்கும் ஒரு மகன் பிறந்துவிட்டார். அந்த மகன் 2019-ல் என்னை பார்க்க வந்தார்.
அப்போது அவரை வரவேற்பு பேசியபோது ரொம்ப கஷ்டப்படுகிறோம் என்று சொன்னார். உங்க தாத்தா வாங்கி வைத்த சொத்துக்கள் என்ன ஆச்சு என்று கேட்டபோது இருக்கும் அனைத்து சொத்துக்களையும் எங்கள் பாட்டி விற்றுவிட்டார் என்று கூறினார். அப்போது உங்களுக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்றால் நான் ரஜினியிடம் தான் சொல்ல வேண்டும் என்று சொன்னேன். அப்போது ஐயா நாங்கள் இந்த ஊருக்கு வந்த புதிதிலேயே ரஜினிகாந்த் 2 லட்சம் பணம் கொடுத்தார் என்று அவர் சொன்னார்.
பியூ சின்னப்பா வாழ்ந்த காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் பிறக்கவே இல்லை. அவரது படங்களையே பார்க்காதவர் பியு சின்னப்பா பேரன் வந்திருக்கிறார் என்றதும் பணம் கொடுத்து உதவி இருக்கிறார். அவர் என்னை சந்தித்து சென்ற அடுத்த வாரம் கொரோனா வந்துவிட்டது அதன்பிறகு சந்திக்கவில்லை என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“