/indian-express-tamil/media/media_files/2025/09/12/rajinikanth-kamal-2025-09-12-16-51-06.jpg)
46 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இருபெரும் ஆளுமைகளான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பதாக வெளியான செய்திகள், சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தகவல், துபாயில் நடைபெற்ற சமீபத்திய சைமா (SIIMA) விருது விழாவில் கமல்ஹாசனே உறுதி செய்யும் வகையில் பேசியிருந்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
இந்த படத்தை கைதி, லியோ மற்றும் கூலி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், கடைசியாக ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்து நடித்த படம் எது என்பது பலரின் கேள்வியாக உள்ளது. அந்த படம் 1979-ம் ஆண்டு வெளியான நினைத்தாலே இனிக்கும் என்ற படம் தான். இதே ஆண்டு, அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற படமும் வெளியாகியுள்ளது. கே.பாலச்சந்தர் இயக்கிய நினைத்தாலே இனிக்கும் படம் அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வெளியானது,
அதே சமயம், அலாவுதீனும் அற்புத விளக்கும் படமும் அதே நாளில் வெளியாகி இருந்தாலும், அந்த படம் மலையாளத்தில் தான் வெளியானது. தமிழில் ஜூன் மாதம் வெளியானது. 'ஆயிரத்தொரு இரவுகள்' கதையின் அடிப்படையில் உருவான அந்தப் படத்தில், கமல் அலாவுதீனாகவும், ரஜினிகாந்த் அவரது எதிரியான கமருதீனாகவும் நடித்தனர். கடந்த பல தசாப்தங்களாக, இருவரும் தங்களது தனித்துவமான பாதையில் பயணித்து, தமக்கென ஒரு அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.
இருவரும் தனித்தனியாக உச்சம் தொட்டிருந்தாலும், அவர்களின் நட்பு மட்டும் மாறாமல் உள்ளது. கமல்ஹாசனின் உறவினரும், பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான நடிகை சுஹாசினி மணிரத்னம், சைமா விழாவில் பேசும்போது, அவர்களின் உறவை 'சகோதரர்கள்' என்று வர்ணித்தார். அப்போது அவர், "கமல் படப்பிடிப்பில் காயப்பட்டால், ரஜினி சார் உடனே எனக்கு போன் செய்து, 'கமலுக்கு ரொம்ப வலிக்குதா?' என்று கேட்பார். நான் ஆம் என்று சொன்னால், 'கமல் வலிக்குதுன்னு சொன்னா அது உண்மையாகத்தான் இருக்கும், ஏனென்றால் அவன் ஒருபோதும் வேதனையை வெளிப்படுவதில்லை' என்று சொல்வார்" எனக் கூறி, அவர்களின் நெருக்கத்தை வெளிப்படுத்தினார்.
முதலில் 'கூலி' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், "கமல்ஹாசன் இதில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறாரா?" என்று வேடிக்கையாகக் கேட்டபோது இவர்கள் இருவரும் இணைந்து திரைப்படத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல்கள் பரவ தொடங்கியது. அந்த தகவலை உறுதி செய்யும் வகையில், சைமா விழாவில், தொகுப்பாளரும் நடிகருமான சதீஷ் இந்த வதந்திகள் குறித்து கேட்டபோது, கமல்ஹாசன் தனது குசும்பு கலந்த நகைச்சுவையுடன் பதிலளித்தார்.
அவர், "நாங்கள் இருவரும் ரொம்ப நாளைக்கு முன்னாடியே சேர்ந்தோம். பிறகு பிஸ்கெட்டை பாதியா உடைச்சு, அதை எங்களுக்குத் தனித்தனியா கொடுத்தாங்க. எங்களுக்கு முழு பிஸ்கட் வேணும்னு ஆசைப்பட்டோம், அதுவும் கிடைச்சுச்சு. நல்லா சாப்பிட்டோம். இப்போ மீண்டும் பாதி பிஸ்கட் சாப்பிடுறதே எங்களுக்குப் போதும்னு தோணுது. அதனாலதான் ஒண்ணா சேர்ந்திருக்கோம்" என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.