முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வலதுகரமாக இருந்த தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், அரசியல்வாதி என பன்முக திறமை கொண்ட ஆர்.எம்.வீரப்பன் இன்று மரணமடைந்த நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நபர் என்று உருக்கமாக கூறியுள்ளார்.
1926-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தவர் ஆர்.எம்.வீரப்பன். ராமசுப்பையா என்பவரின் மூலம் பெரியாருக்கு அறிமுகமான ஆர்.எம்.வீரப்பன், திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதனை பின்பற்ற தொடங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அண்ணாவின் அறிமுகம் கிடைத்த நிலையில், 1953-ம் ஆண்டு அண்ணாவின் நாடக கம்பெனியில் மேலாளராக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினார்.
1958-ல் வெளியான நாடோடி மன்னன் திரைப்படம் தான் எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் நிறுவனத்தின் முதல் படமாகும். அதன்பிறகு உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண் ஆகிய திரைப்படங்கள் அந்நிறுவனத்தில் தயாரான நிலையில், அடுத்து ஆர்.எம்.வீரப்பன் தனியாக பட நிறுவனம் தொடங்கிய எம்.ஜி.ஆர் படங்களை தயாரிக்க தொடங்கினார். 1964-ல் வெளியான தெய்வத்தாய் படமே ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த முதல் படம் இந்த படத்தில் எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்திருந்தார்.
அதன்பிறகு பல படங்களை தயாரித்த ஆர்.எம்.வீரப்பன் சினிமாவிலும் அரசியலிலும், எம்.ஜி.ஆருடன் பயணிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது ஆர்.எம்.வீரப்பனும் தி.மு.கவில் இருந்து விலகி எம்.ஜி.ஆரின் அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பிறகு எம்.ஜி.ஆரின் வலது கரமாக பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பன், 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அவருக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றியை தேடி கொடுத்தார்.
அதேபோல் 1987-ல் எம்.ஜி.ஆர் மரணமடைந்தபோது கட்சி இரண்டாக பிளவுபட்ட நிலையில், அதனை ஒன்றினைத்து கட்சியின் இணைப்பொதுச்செயலாளராக இருந்தார். சட்டமன்ற தேர்தலிகளில் பல வெற்றிகளை பார்த்த ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியை நிறுவி அதன் நிறுவன தலைவராகவும் இருந்துள்ளார். 97 வயதான ஆர்.எம்.வீரப்பன் வயது மூப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். அவரது மரணம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அவரது மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், என் வாழ்நாளில் மறக்க முடியாத மனிதர் ஆர்.எம்.வீரப்பன் என்று கூறியுள்ளார். சகோதரர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இம்மண்ணுலகை விட்டு சென்றுள்ளார். எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையிலும் அவரின் வலது கரமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், பணத்தின் பின்னால் சென்றவர் அல்ல.
அண்ணாவின் கோட்பாடான கடமை கன்னியம் கட்டுப்பாடு இவை மூன்றையும் பின்பற்றிய அவரால், உருவாக்கப்பட்ட பலர் தற்போது மத்திய மாநில அமைச்சர்களாக வலம் வருகின்றனர். அவருடனான என் நட்பு மிகவும் ஆழமானது. என் வாழ்நாளில் நான் அவரை மறக்கவே முடியாது. தற்போது அவர் நம்முடன் இல்லை என்பது மிகவும் வருந்ததக்கது என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“