/indian-express-tamil/media/media_files/2025/07/02/kutty-raja-2025-07-02-13-59-34.jpg)
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும், நடிகர் சத்யன் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவரது தனித்துவமான நடிப்பு மற்றும் மறக்க முடியாத பஞ்ச் டயலாக்குகள், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அதிலும் குறிப்பாக ஹே தோத்தாங்குளிஸ், ஹேவிங் ஃபன்னா?" என்ற ஒரே ஒரு வரி போதும், சத்யன் என்ற பெயர் உடனே நினைவுக்கு வரும். விஜய்யின் நண்பன் திரைப்படத்தில் 'சைலன்சர்' கதாபாத்திரத்தில் நடித்துப் பெரிய அளவில் பிரபலமான சத்யன், இன்றும் தமிழ் சினிமா நகைச்சுவையில் ரசிகர்களின் விருப்பமான நட்சத்திரமாகவே இருக்கிறார்.
கதாநாயகனாக ஒரு முயற்சி!
இன்று நகைச்சுவை நடிகராக அறியப்படும் சத்யன், ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவே அறிமுகமானார். சூர்யாவின் ஒரு படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், 2000 ஆம் ஆண்டு வெளியான இளையவன் திரைப்படத்தில் தான் அவர் முதல் முதலாக ஹீரோவாக நடித்தார்.. அதைத் தொடர்ந்து, கண்ணா உன்னை தேடுகிறேன் என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்தார். ஆனால், இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து, சத்யன் குணச்சித்திர வேடங்களுக்கு மாற முடிவு செய்தார்.
நகைச்சுவைக்கான பயணம்
ஹீரோ கனவு கானல் நீராக போனதால், சத்யன் படிப்படியாக நகைச்சுவைக்கு மாறினார். பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் நண்பர் கதாபாத்திரங்களில் நடித்தசத்யன், இன்று வரை 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், நண்பன், துப்பாக்கி, மற்றும் நவீன சரஸ்வதி சபதம் போன்ற திரைப்படங்கள்தான் அவருக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தன. குறிப்பாக, விஜய்யுடன் நடித்த நண்பன் மற்றும் துப்பாக்கி படங்களின் அவரது கதாபாத்திரங்கள் பெரிதும் பாராட்டப்பட்டன. இன்று, சத்யன் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தாலும், அவரது பின்னணி பலருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்யமான கதை!
கோடீஸ்வரரின் வாரிசு!
சத்யன் ஒரு பெரிய ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான மாதம்பட்டி, அதன் சமையலுக்கும், உணவு வகைகளுக்கும் மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான சொத்துக்களுக்குச் சொந்தக்காரரான மதம்பட்டி சிவகுமாரின் பூர்வீக பூமியாகவும் பலருக்கும் தெரிந்திருக்கும். வரலாற்று ரீதியாக, இவர்களது குடும்பம் ஒரு சிறிய ராஜ்யத்தைப் போலவே வாழ்ந்திருக்கிறது. மாதம்பட்டி சிவகுமாரின் ஒரே மகன் தான் சத்யன். மதம்பட்டியில் உள்ள இவர்களது பங்களா ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் தோட்டங்களும், பண்ணை நிலங்களும் இவர்களுக்குச் சொந்தமாக இருந்தன.
ஒரு காலத்தில் பெரும் செல்வந்தர்களாக அறியப்பட்ட மாதம்பட்டி குடும்பம், இன்று தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டது. இருப்பினும், அந்த குடும்பத்தின் ஒருவரான மாதம்பட்டி சிவகுமார், சினிமா மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். இவருக்கு, பிரபல தமிழ் நடிகர்களான மார்க்கண்டேயன் சிவகுமார் மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் குடும்ப உறவுகள் உண்டு. சத்யராஜ் இவரது அத்தையின் மகன் ஆவார். சத்யராஜ் சினிமாவுக்கு வருவதை குடும்பத்தில் அனைவரும் கடுமையாக எதிர்த்தபோது, மாதம்பட்டி சிவகுமார் தான் அவருக்கு பக்கபலமாக நின்றார். சினிமா ஆரம்ப காலங்களில் சத்யராஜ் போராடியபோது, அவருக்கு மாதாமாதம் பணம் கொடுத்து நிதி ரீதியாகவும் உதவினார்.
பின்னர், மாதம்பட்டி சிவகுமார் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டார். இது அவர்களுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அவர்கள் தங்கள் சொத்துக்களை விற்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில், மாதம்பட்டி சிவகுமார் தனது மகன் சத்யனை சினிமாவுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கனவில், இளையவன் என்ற படத்தைத் தயாரித்தார். ஆனால், இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் மேலும் நிதி இழப்புகள் ஏற்பட்டு, மேலும் சொத்துக்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மாதம்பட்டி சிவகுமார் மறைவுக்குப் பிறகு, நடிகர் சத்யன் சில ஆண்டுகளுக்கு முன்பு மதம்பட்டியில் இருந்த தங்கள் பங்களாவையும் விற்றுவிட்டு, சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டார். ஒரு காலத்தில் மாதம்பட்டி மக்களால் அன்புடன் 'குட்டி ராஜா' என்று அழைக்கப்பட்ட சத்யன், இன்று தனது பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு, தனது சொந்த ஊருக்குச் செல்வதையும் தவிர்த்து வருகிறார். இது அவரது உறவினர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளதாக, சமீபத்தில் வெளியான சில வீடியோக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.