தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் நடிகர் திகலம் என்று பெயரேடுத்த சிவாஜி கணேசன் நடிப்புத்துறைக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் ஒரு குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
நாடக நடிகராக இருந்து 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சிவாஜி கணேசன். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்துடத்து பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது. அதன்பிறகு பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து நடிகர் திலகம் என்று பெயரேடுத்த சிவாஜி கணேசன், காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான காக்கா ராதாகிருஷ்ணனின் நெருங்கிய நண்பர்.
இருவர்கள் இருவருமே திருச்சியில் அருகருகே வீடுகளில் வசித்து வந்துள்ளனர். சிறுவயதில் தந்தையை இழந்த காக்கா ராதாகிருஷ்ணன், ஒருநாள் வயல்வெளியில் பாடிக்கொண்டிருந்தபோது, அதை கவனித்த ஒருவர், அவரது அம்மாவிடம் சென்று பையனை பயாஸ்கோப்பில் சேர்த்துவிடு நன்றாக பாடுகிறான் என்று சொல்ல, காக்கா ராதாகிருஷ்ணனுக்கு அதில் ஆர்வம் வந்துள்ளது. ஆனால் இதில் சேர்வது எப்படி என்பது குறித்து தெரியாமல் இருந்துள்ளார்.
அப்போது தனது வீட்டுக்கு அருகில் இருந்த அப்போதைய நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரை சந்திக்க சென்றுள்ளார். அவரும் காக்கா ராதாகிருஷ்ணனை பார்த்து, என்ன என்று கேட்க, நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று கேட்காமல், வேலை வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். ஆனாலும் அவர் நடிப்பு ஆர்வத்தில் தான் வேலை கேட்கிறார் என்பதை புரிந்துகொண்ட எம்.கே.டி, அவரை எதார்த்தம் பொன்னுச்சாமி நாடக குழுவில் சேர்க்க கூறியுள்ளார்.
இங்கிருந்து நாடகங்களில் நடிக்க தொடங்கிய காக்கா ராதாகிருஷ்ணன், ஒருநாள் தனது அம்மாவை பார்க்க வர, பக்கத்து வீட்டில் இருந்த தனது நெருங்கிய நண்பரான சிவாஜி கணேசனுடன் தனது நாடக குழு மற்றும் நடிப்பு ஆகியவற்றை பற்றி பேசியுள்ளார். ஏற்கனவே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட சிவாஜிக்கு, ராதாகிருஷ்ணன் சொல்வதை கேட்டு, அவரது நாடக குழுவில் இணைய முடிவு செய்துள்ளார். ஓரிரு நாட்களில், ராதாகிருஷ்ணன் மீண்டும் நாடக குழுவுக்கு திரும்பிவிடுகிறார். அவரது குழு அப்போது திண்டுக்கல்லில் நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்தனர்.
அதன்பிறகு, சிவாஜி கணேசன், தனது வீட்டில் சொல்லிக்கொள்ளாமல், திண்டுக்கல் புறப்பட்டு, காக்கா ராதாகிருஷ்ணனுக்கு தெரியாமலே அவரது நாடக குழுவில் இணைந்துள்ளார். தான் ஒரு அநாதை என்று சொல்லி சேர்ந்ததால், ராதாகிருஷ்ணனுக்கு தெரிந்தால், தனது குடும்ப பின்னணி தெரிந்துவிடும் என்று சிவாஜி பயந்துள்ளார். ஆனாலும் ஒரு கட்டத்தில், சிவாஜி இங்கிருப்பதை தெரிந்துகொண்ட ராதாகிருஷ்ணன், அதன்பிறகு அந்த நாடக குழுவில் ஒன்றாக பயணித்துள்ளனர்.
1949-ம் ஆண்டு வெளியான நல்லதம்பி என்ற படத்தின் மூலம் அறிமுகமான காக்கா ராதாகிருஷ்ணன் அதன்பிறகு பல படங்களில் நடித்துள்ளார். மங்கையர்கரசி என்ற படத்தில், மகாராஜவை காக்கா பிடித்தவது அரசாங்க வேலையில் சேர்ந்துவிடு என்று அவரது அம்மா சொல்ல, இவர் நிஜ காக்காவை பிடித்து வேலை கேட்பார். அதனால் தான் அவரது பெயர் காக்கா ராதாகிருஷ்ணன் என்று ஆனது.
கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்த நடிகராக காக்கா ராதாகிருஷ்ணன், அவரது படங்களாக தேவர் மகன், வசூல் ராஜா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்திருப்பார். அதேபோல் தேவர் மகன் படத்தில் தனது நெருங்கிய நண்பரான சிவாஜியுடன் காக்கா ராதாகிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“