கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், தனது நண்பருடன் கல்லூரி வளாகத்தில் மாணவி பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மாணவரை தாக்கி, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் ஆய்வு செய்த நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனிடையே, ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆர் பதிவு ஆன்லைனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து வலிறுத்தி வரும் நிலையில், பா.ஜ.க சார்பில் சில போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதேசமயம் இந்த வழக்கு தொடர்பான முன்னணி நடிகர்கள் தங்கள் எதிர்ப்புகள் அல்லது கருத்துக்கள் எதுவும் சொல்லாத நிலையில், தற்போது நடிகர் சிவாகார்த்திகேயன், அண்ணா பல்கலைகழக பாலியல் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனிடையே திருச்செந்தூரில், முருகன் கோவிலில் தரிசனம் செய்த, அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முருகனின் ஆறுபடை வீட்டுக்கும் போக வேண்டும் என்று ஆசை. இப்போது திருச்செந்தூர் வந்திருக்கிறேன். அடுத்து திருப்பரங்குன்றம், பழனி எல்லாம் போக வேண்டும் என்று கூறியுள்ளார்.
அப்போது அவரிடம், அண்ணா பல்கலைகழக மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து கேட்கப்பட்டபோது, அதைப்பற்றி இங்கு பேச வேண்டாம். வேறு எங்காவது பேசலாம். இதுபோன்று நடக்க கூடாது என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். இதில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது சரியானது தான். ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் தான் நாம் எல்லோரும் நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களும் தைரியமாக இருக்க வேண்டும். இனியும் இப்படி நடக்காது என்று நம்புவோம் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.