தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பிரலமான நடிகராக இருக்கும் வழக்கு எண் பட ஹீரோ நடிகர் ஸ்ரீ, தற்போது தோற்றம் மாறி ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ (ஸ்ரீராம் நடராஜன்). இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து, மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர், லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான மாநகரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
மாநகரம் 2017-ம் ஆண்டு வெளியான நிலையில், அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்காத ஸ்ரீ, 2024-ம் ஆண்டு இறுகப்பற்று என்ற படத்தில் 3 ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார். ஸ்ரீ, தேர்வு செய்த படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களம் தான் என்றாலும், அவர் அதிகமான படங்கள் கமிட் ஆகவில்லை. சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் ஸ்ரீ அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபகாலமாக உடல் மெலிந்த நிலையில், அரைநிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ரீ வெளியிட்டு வந்தார். இதனால் சமூகவலைளதங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இவருக்கு என்ன ஆச்சு, என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர். மேலும் திரைத்துறையில் அவருக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள் மற்றுமு் தயாரிப்பாளர்கள் தான் இதற்கு காரணம் என்றும் கூற தொடங்கினர். இதனிடையே தற்போது தனது வீடியோக்கள் குறித்து ஸ்ரீ மனம் திறந்து பேசியுள்ளார்.
இது தொடர்பான ஒரு வீடியோவில், இன்றுடன் நான் புகைப்பிடிப்பதை விட்டு, ஒரு வருடம் 4 மாதங்கள் 16 நாட்கள் ஆகிறது. அதற்காகத்தான் இந்த வீடியோ. இதை பகிர்ந்துகொள்வதன் மூலம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிரித்துக்கொண்டே தொடர்ந்து மகிழ்ச்சியாக இருங்கள். புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு முதல் 90 நாட்கள் சர்க்கரை கலந்த பிளாக் காபியை பயன்படுத்தினேன். அதனால் புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு நீங்களும் முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீ வீடியோ வெளியிட்டிருந்தாலும், அவரது உடல் நிலை மற்றும் மனநிலை குறித்த கேள்விகள் எழுந்துகொண்டு தான் இருக்கிறது. அவரை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு, அவரை எப்படியாவது மீட்டு கொண்டுவாருங்கள் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்