மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கை வெளியானதில் இருந்து நடிகைகள் பாலியல் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து சன்னி லியோன் மற்றும் பிரபுதேவா ஆகியோர் கூறியுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன். அவ்வப்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் பிரபு தேவாவுடன் இணைந்து நடித்துள்ள பேட்ட ராப் என்ற படம் வரும் செப்டம்பர் 17-ந் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பிரபுதேவா விஜய்யுடன் நடித்திருந்த கோட் படம் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ள நிலையில், தற்போது பிரபுதேவா பேட்ட ராப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்து சென்னை வந்திருந்த நடிகை, இன்று கொச்சியில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சன்னி லியோனிடம், ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சன்னி லியோன், நம்முடைய எல்லைகளை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நோ சொல்ல வேண்டிய இடத்தில் நோ சொல்லிவிட வேண்டும். வெளியேற வேண்டிய இடத்தில் இருந்து கண்டிப்பாக யோசிக்காமல் வெளியேறிவிட வேண்டும். எத்தகைய இழப்புகளையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அதே சமயம் எதுவாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய நடிகர் பிரபுதேவா, கடந்த சில ஆண்டுகளாக இது தொடர்பான புகார்கள் அதிகம் வந்துகொண்டு இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடிகை ஒருவர் ஓடும் வாகனத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான புகாரின் காரணமாக ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டு, திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் பாலியல் தொந்தரவுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது
இந்த குழு கடந்த 2019-ம் ஆண்டு தங்களது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அறிக்கை தொடர்பான நடிகர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“