தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா கங்குவா படத்திற்கு பிறகு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தனது 44-வது படத்தில் நடித்து வரும் நிலையில், இவரின் அடுத்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன். கடந்த 2022ம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில், கடந்த 2 வருடங்களாக சூர்யா நடிப்பில் வேறு எந்த படமும் வெளியாகிவில்லை. அதே சமயம் கங்குவா என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள கங்குவா திரைப்படம், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து வருகிறார். முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே சூர்யா தனது 45-வது படமாக யார் இயக்கததில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆர்.ஜே.பாலாஜி கூறிய கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், அடுத்து இந்த படத்தில் தான் அவர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. அதனை உறுதி செய்யும்விதமாக தற்போது சூர்யா 45 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ள நிலையில், ஆர்.ஜே.பாலாஜி படத்தை இயக்குகிறார்.
2013-ம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யனும் குமாரு என்ற படத்தின் மூலம் நடிகாராக அறிமுகமான ஆர்.ஜே.பாலாஜி, பல படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்தார். 2019-ம் ஆண்டு வெளியாக எல்.கே.ஜி படத்தின் மூலம் கதாசிரியராக மாறிய அவர், அடுத்து மூக்குத்தி அம்மன் என்ற பெரிய வெற்றிப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு இயக்குனாகவும் நடிகராகவும் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அதன்பிறகு வீட்ல விஷேஷம் என்ற படத்தை இயக்கினார்.
தான் இயக்கிய படங்களில் நானே ஹீரோவாக நடித்திருந்த ஆர்.ஜே.பாலாஜி முதல்முறையாக மற்றொரு நடிகரை தனது கதையில் நடிக்க வைத்து இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள நிலையில், விரைவில், படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆர்.ஜே.பாலாஜி, பெரிய பிளாக்பஸ்டர்க்கு நான் உத்தரவாதம் என்று கூறியுள்ளார்.
மேலும் சூர்யா, ஏ,ஆர்.ரஹ்மான் ஆகியோரும் தங்களது எக்ஸ் பக்கத்தில், சூர்யா 45 படத்தின் அறிவிப்பை பகிர்ந்துள்ளனர். அருவா அதிகமாக இருக்கும் இந்த போஸ்டரில் நடுவில் குதிரை ஒன்று உள்ளது. மேலும் வேல்கம்பும் படத்தில் உள்ளதால், இது வரலாற்று படமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் இது குறித்த கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“