Actor Vadivelu Re-Entry In Tamil Cinema : 90 காலகட்டம் தொடங்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து நின்றவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர், இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் மூலம் தனி ஹீரோவாக நடித்தார். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் வடிவேலு இந்திரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலி ராமன், எலி உள்ளிட்ட சில படங்களில் தனி ஹீரோவக நடித்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடன் காமெடி வேடங்களில் கலக்கிய இவர், கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு விஜயின் மெர்சல் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.
சில நாட்கள் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, வடிவேலு அப்படத்தில் இருந்து விலகினார். இது குறித்து இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க தடை விதிக்கும் வகையில் ரெட்கார்டு வழங்கப்பட்டது. இதனால் கடந்த 4 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது நடிகர் வடிவேலுவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வடிவலு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இதில் முதல்கட்டமாக அவர் லைகா நிறுவத்தின் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும், இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய லைகா நிறுவனம் இந்த தடை நீக்க முக்கிய காரணமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வடிவேலு கூறுகையில், இது எனக்கு மறுபிறவி. லைகா நிறுவனம் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கவுள்ளேன். மீண்டும் சினிமாவில் தோன்ற இருப்பது, முதன்முதலில் நடிக்கும்போது வாய்ப்பு தேடியது போன்ற உணர்வைத் தருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் என் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம்தான். மக்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன். அவர் இப்போது மக்கள் மத்தியில் சபாஷ்கரன் ஆகிவிட்டார் என்று கூறியுள்ள வடிவேலு’, வரும் செப்டம்பர் மாதம் முதல் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நாய் சேகர் படத்தில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2 படங்களில் நாயகனாக நடித்துவிட்டு, பின்னர் காமெடியனாகவும் நடிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார் அவர் தமிழக முதல்வரைச் என்று சந்தித்தேனே அன்று முதல் எனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil