நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா... என்ற விவாதங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்திருக்கின்றன. ஆனால், அதற்கு இதுவரையிலும் விஜய் வெளிப்படையாகவோ, அவரின் ரசிகர் மன்றத் தரப்பிலோ பதில் சொல்லப்பட்டதேயில்லை. அதேநேரம் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு சிலர் வெற்றி பெற்றனர். அவர்களை சென்னையில் நடிகர் விஜய் சந்தித்து வாழ்த்தும் சொன்னதோடு மட்டுமல்லாமல், மக்கள் பணியில் இன்னும் வேகமாக செயல்படுங்கள் என்றார்.
Advertisment
அதேபோல அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடியது, இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தி, நலத்திட்ட உதவிகள் கொடுத்தது என ரசிகர் மன்றம் என்ற எல்லையைத் தாண்டி, அரசியல் கட்சிகளுக்கான அடையாளங்களைப்போல விஜய் மக்கள் இயக்கம் தன்னைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில், மதுரையில் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில், ஒட்டப்பட்டிருந்த விஜய் பிறந்தநாள் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த போஸ்டரில், ‘2024 நாடாளுமன்றமே, 2026 தமிழக சட்டமன்றமே’ எனப் போஸ்டர்கள் மதுரை எங்கும் ஒட்டப்பட்டுள்ள நிலையில், இந்த போஸ்டர் அரசியல் கட்சியினரை இந்த போஸ்டர்கள் கொஞ்சம் அதிர வைத்தன. விஜய்யின் அரசியல் வருகையை எதிர்பார்ப்பது போலவே அச்சிடப்பட்டிருந்த அந்த போஸ்டரில், `விரைவில் மதுரையில் மாநாடு' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் திருச்சி புறநகர் பகுதியிலும் சுவர் விளம்பரங்கள் அதிர்ந்தன. அதிலும், திருச்சி மாவட்டம் முசிறி அருகே "திருச்சி என்றாலே திருப்பம் தான்.. விரைவில் மாநாடு.. காத்திருக்கு தமிழ்நாடு.. வா தலைவா.. " தளபதியாரே என விஜய் ரசிகர்கள் விஜய்க்கு அழைப்பு விடுக்கும் விதமாக சுவர் விளம்பரங்கள் இடம் பெற்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உலக பட்டினி தினத்தை நினைவு கூறும் விதமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பாக மதிய உணவு வழங்கப்படும் என அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கினர். சென்னையில் நடிகர் விஜய் வசிக்கும் நீலாங்கரைப் பகுதியில் 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
திருச்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கீழப்புலிவார்டு ரோடு பகுதியில் உள்ள புனித அந்தோணியார் கோயில் தெருவில் மாணவர்களுக்கு அருசுவை பிரியாணியை முன்னாள் எம்.எல்.ஏ., புஸ்லி ஆனந்த் விஜய் படத்துடன் முன் நின்று மதிய உணவினை வழங்கி சிறப்பித்தார். அதேபோல், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 52 இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மதிய உணவு வழங்கினர்.
பட்டுக்கோட்டை நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் கோவில் சன்னதி மற்றும் சாலை ஓரத்தில் உணவு இன்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவினை நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கினர். இந்த விழாவில் பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஆதிராஜாராம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர கௌரவத் தலைவர் ரமேஷ், நகர மாணவரணி தலைவர் வெங்கடேஷ், நகர மகளிர் அணி தலைவர் தீபா, நகர மகளிர் அணிச்செயலாளர் தளபதி கனி, நகர விவசாய அணி நிர்வாகிகள் மணி, ராமச்சந்திரன் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியினை வெற்றி பெறச்செய்தனர்.
அதேபோல நெல்லையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக மதிய உணவு வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மதிய உணவு வழங்கிய நிகழ்வுகள், சமூக வலைதளங்களிலும் அதிகம் பகிரப்பட்டு, கவனிப்பை ஏற்படுத்தின. இவையெல்லாம் அரசியல் வருகைக்கான அச்சாரமா என்று விஜய் மக்கள் இயக்கத்தின் பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஆதிராஜாராமிடம் பேசியபோது, “உள்ளாட்சித் தேர்தலில் எந்த அடையாளமும் இல்லாமல், விஜய் மக்கள் இயக்கமாகப் போட்டியிட்டபோதே சில இடங்களில் வெற்றிபெற முடிந்தது. விஜய் அண்ணாவின் படம் ரிலீஸுக்கு போஸ்டர் ஒட்டுவது, கட்-அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வது என்றுதான் இருந்தோம். ஆனால், இப்போது சமூக அக்கறையோடு எங்களை செயல்பட வைத்திருக்கிறார். அம்பேத்கர் அய்யாவின் பிறந்தநாளில் சிலைக்கு மாலை அணிவித்தது, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கரை அழைத்து பாராட்டி நினைவுப்பரிசு வழங்கிடச்செய்தது, பட்டினி தினத்தில் தமிழகம் முழுவதும் உணவளித்தது போன்ற செயல்கள் மக்கள் மத்தியிலும் நற்பெயரை ஏற்படுத்தியிருக்கின்றது.
நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தளபதி விஜய் கட்சிப் பெயரையும், கொடியையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். கட்சியாக மாற்றினால் நிச்சயம் நாங்கள் கடும் போட்டி அளிப்போம் என்று நம்பிக்கை இருக்கிறது” என்றார் புன்னகையுடன்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil