பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
நடிகர் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு இன்று புதுச்சேரியில் நடந்தது இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ரசிகர்கள் பலரும், பூக்களை தூவி தளபதி தளபதி என்று கோஷம் எழுப்பிய ரசிகர்கள். தொடர்ந்து ரசிகர்களுக்கு மாலையை வீசிய விஜய் செல்பி எடுத்து உற்சாகப்படுத்தினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய், நடித்துவரும் கோட் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிலையில், இந்த படத்தின் பாடல் காட்சிகள் புதுச்சேரியில் கடலூர் சாலையில் உள்ள பழமை வாய்ந்த ஏ.எப்.டி பஞ்சாலையில் இன்று படமாக்கப்பட்டது. மிக ரகசியமாக நடந்த இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார். இந்த செய்தி புதுச்சேரியில் மதியம் 2 மணிக்கு காட்டுத்தீ போல் பரவியது.
இதனையடுத்து அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஏ.எஃப்.டி மில் முன்பு குவிந்து தளபதி தளபதி என்று கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதனால் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படப்பிடிப்பில் இருந்த த.வெ.க பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் கை கூப்பி கலைந்து செல்லும்படி கேட்டும் ரசிகர்கள் களையவில்லை.
மாறாக மில் எதிரில் உள்ள மரத்தின் மீது ஏறியும், மில் சுற்றி உள்ள மதில் சுவர் மீதும் ஏறியும் விஜயை காண ரசிகர்கள் துடித்தனர். மாலை 5.45 மணிக்கு படபிடிப்பு முடிந்து வெளியே வேனில் வந்த விஜய் மில் நுழைவு வாயிலில் வேன் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கை அசைத்து அவரது பாணியில் முத்தத்தை பறக்கவிட்டார். பதிலுக்கு ரசிகர்கள் அவர் மீது பூக்களை தூவியும் மாலையை வீசியும் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
பதிலுக்கு விஜய் அந்த மாலைகளை ரசிகர்களிடமே வீசி அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டு புறப்பட்டார். இதனையடுத்து கடலூர் சாலையில் போக்குவரத்து சீரானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“