தயாரிப்பாளர் கேரவன் கொடுத்ததால் கடுப்பான கேப்டன் விஜயகாந்த் உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு இங்கிருந்து கிளம்ப முயன்றுள்ளார். இதனால் அடுத்து என்ன நடந்தது என்று இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தவர் விஜயகாந்த். சினிமா பின்புலம் இல்லை என்றாலும், தனது தொடர் முயற்சிகளின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்த இவர், எம்..ஜி.ஆர் பாணியில் சினிமாவில் அனைவருக்கும் சமமான உணவு என்ற வழக்கத்தை கொண்டு வந்தவர்.
அதேபோல் அறிமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்த தமிழ் சினிமா நடிகர் என்ற அடையாளம் பெற்றிருக்கும் விஜயகாந்த், நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு, கால்ஷீட் கொடுத்து அவர்களை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் வேலைகளையும் செய்துள்ளார். இன்றைய நடிகர்களில் தமிழ் தவிர வேற்று மொழி படங்களில் நடிக்காத ஒரே நடிகர் விஜயகாந்த் தான்.
தற்போது அவர் இல்லை என்றாலும், அவரை பற்றி சினிமா பிரபலங்கள் பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் விஜயகாந்த் நடிப்பில் வாஞ்சிநாதன் மற்றும் பேரரசு என இரண்டு படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காஜா மைதீன் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். 90 காலக்கடத்தில் நடிகர் நடிகைகள் யாரும் கேரவன் பயன்படுத்தாத நிலையில், 2000-ம் ஆண்டு தொடக்கத்தில் சினிமாவில் கேரவன் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
அப்போது விஜயகாந்தை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்று யோசித்த தயாரிப்பாளர் காஜா மைதீன், ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடைபெற்ற முதல் நாள் படப்பிடிப்பில் அப்போது அதிக வாடகை உடைய கேரவன் ஒன்றை எடுத்து வந்து நிறுத்தியுள்ளார். விஜயகாந்த் வந்தவுடன், கேப்டன் கேரவனில் மேக்கப் போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்ல, கேரவனா எதுக்கு என்று விஜயகாந்த் கேட்டுள்ளார். நீங்கள் மேக்கப் போடுவதற்கு ரெஸ்ட் எடுப்பதற்கு என்று காஜா மைதீன் கூறியுள்ளார்.
இதை கேட்ட விஜயகாந்த், ஒன்றும் சொல்லாமல், தனது உதவியாளரை அழைத்து இன்னைக்கு ஷூட்டிங் இல்ல பேக்கப் பண்ணிடுங்க என்று சொல்ல, காஜா மைதீன் அதிர்ந்துள்ளார். என்ன கேப்டன் என்னாச்சு என்று கேட்க, நான் இங்க வேலைக்கு வந்திருக்கிறேனா இல்ல ரெஸ்ட் எடுக்க வந்திருக்கிறேனா, இந்த கேரவன் இங்கு இருந்தால் இன்னைக்கு ஷூட்டிங் இல்ல. நான் இருக்கனுமா அல்லது கேரவன் இருக்கனுமா என்று கேட்டுள்ளார்.
விஜயகாந்தின் இந்த பேச்சால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் காஜா மைதீன், உடனடியாக அந்த கேரவனை தள்ளி ஏ.வி.எம். ஸ்டூடியோவின் வெளியில் நிறுத்தியதை தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த தகவலை காஜா மைதீன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“