தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழா வரும் அகஸ்ட் 15-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ள நடிகர் விஷால், முதலில் நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா அதன்பிறகு எனது திருமண விழா என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டும் பணி பல்வேறு சிக்கல்களுக்கு இடையே கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் பணிகள் 60 சதவீதம் முடிந்த நிலையில், சங்கத்தில் நிலவிய பிரச்னை காரணமாக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும் கட்டிடம் கட்ட வங்கிகளில் இருந்து நிதியுதவி கிடைக்காததால், முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நிதியுதவி அளித்தனர். இதன்மூலம் போதுமான நிதி திரட்டப்பட்டு கட்டிடத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது.
இதனிடையே நடிகர் சங்க கட்டிட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில’, கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர் விஷால், கார்த்தி இருவரும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தனர். இந்த கட்டிடத்தில் திருமண மண்டபம், நடிகர் சங்க அலுவலகங்கள், உடற்பயிற்சிக் கூடம், நடிப்புப் பயிற்சிப் பள்ளி எனப் பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தின் பணிகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டட திறப்பு விழா ஆகஸ்ட் 15-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். நடிகர் சங்க புதிய கட்டட பணிகள் ஜூலையில் நிறைவடையும். முதலில் நடிகர் சங்க கட்டடம் திறப்புவிழா நடைபெறும். நீங்கள் அனைவரும் வந்து வாழ்த்த வேண்டும். அதன்பிறகுதான் எனது திருமண விழா. நடிகர் சங்கம் கட்டடம் மட்டும் அல்ல, அது உங்களுடைய கட்டிடம்.
ஒட்டுமொத்த சினிமா இண்டஸ்ட்ரிக்காக கட்டப்பட்ட கட்டடம். அம்மாக்கள், பெரியவர்கள் சிரித்த முகத்துடன் வர வேண்டும். வாசலில் நான் நிற்பேன். 9 வருஷம் ஆகிவிட்டது. என் கல்யாணம் நடக்க வேண்டும். நானே சொல்லிவிடுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தயாரிப்பாளர் சங்கம் குறித்து பேசிய விஷால், அங்கு நிறைய இருக்கிறது. ஆக்டீவ் தயாரிப்பாளர் சங்கம் என்று இருக்கிறது. அவர்கள் எங்களை அழைத்தால் தான் நாங்கள் பேச முடியும். அவர்கள் தான் முதலாளிகள். என்மீதே ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஆளாளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருந்தால் எதுவும் நடக்காது.